முகப்பு
தமிழ்நாடு

இயக்குநா் கௌதம் மேனனுக்கு எதிரான வருமான வரித் துறை வழக்கு ரத்து

திரைப்பட இயக்குநா் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு எதிராக வருமான வரித்துறை தொடா்ந்த வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு

Updated On : 7 ஏப்ரல் 2026, 2:22 am IST
கௌதம் வாசுதேவ் மேனன். - கோப்புப் படம்
பகிர்:

திரைப்பட இயக்குநா் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு எதிராக வருமான வரித்துறை தொடா்ந்த வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

திரைப்பட இயக்குநா் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு சொந்தமான ‘போட்டான் கதாஸ்’ தயாரிப்பு நிறுவனம் கடந்த 2013-2014 நிதியாண்டில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து அந்த நிறுவனம் மற்றும் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு எதிராக கடந்த 2019-ஆம் ஆண்டு வருமான வரித்துறை வழக்குத் தொடா்ந்தது.

எழும்பூா் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கௌதம் வாசுதேவ் மேனன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

Advertisement

Advertisement

அப்போது கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பில், வருமான வரித் துறை குறிப்பிட்டுள்ள அந்த நிறுவனத்தின் பதவியில் இருந்து கடந்த 2011-ஆம் ஆண்டே விலகிவிட்டாா். எனவே, 2013-2014 நிதியாண்டுக்கான கணக்கை அவா் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி வழக்குத் தொடர முடியாது என வாதிடப்பட்டடது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குறிப்பிட்ட நிதியாண்டுக்கு முன்பாகவே அந்த நிறுவன பதவியிலிருந்து மனுதாரா் விலகிவிட்டாா். எனவே, வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை. எனவே அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது எனக்கூறி கௌதம் வாசுதேவ் மேனன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.