விஜய் ஆதரவுடன் முதல்வராக இபிஎஸ் திட்டம்; பதவியை விட்டுக்கொடுத்தேன்! செங்கோட்டையன்
ஈரோடு மாவட்டம் கோபி தொகுதியில் செங்கோட்டையன் பிரசாரம்...
தவெக தலைவர் விஜய்யின் ஆதரவுடன் முதல்வராகி ரூ. 5,000 கோடி சம்பாதிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டதாக செங்கோட்டையன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் அக்கட்சியின் மாநில நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் போட்டியிடுகிறாா்.
முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார்.
Advertisement
இந்நிலையில் இன்று கோபி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட செங்கோட்டையன் மக்கள் மத்தியில் பேசுகையில்,
"தவெக தலைவர் விஜய்யின் ஆதரவுடன் முதல்வராகி ரூ. 5,000 கோடி சம்பாதிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார். அதனை நான் முறியடித்துவிட்டேன். அதனால் எடப்பாடி பழனிசாமி, என் மீது கடும் கோபத்தில் இருக்கிறார். அதனாலேயே என்னுடைய வேட்புமனு தாக்கல் மீது புகார் அளித்தார்கள். ஆனால் நான் 10 முறை வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறேன். எனக்கு தெரியாதா? 10 முறை தோல்வியடைந்த பழனிசாமி என்று கூறுகிறார்கள்.
அப்படிப்பட்ட அவர், 'துரோகி செங்கோட்டையனை வீழ்த்தி டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும், இங்கு வெற்றி விழா கொண்டாட வேண்டும்' என்று கூறுகிறார். யார் துரோகி? முதல்வர், பொதுச் செயலர் பதவியை இபிஎஸ்ஸுக்கு நான் விட்டுக்கொடுத்தேன். அதற்கான பரிசு இதுதானா? என்னால் அதிகாரத்தைப் பெற்றவர்கள் என்னை சாதாரண உறுப்பினராகக்கூட இல்லாமல் கட்சியை விட்டு அகற்றினார்கள்.
விசில் சின்னத்திலும் செங்கோட்டையனுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்" என்று பேசினார்.