திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏப்.18 வரை மழைக்கு வாய்ப்பு!
திருநெல்வேலி, கன்னியாகுமரி, மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஏப். 18-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி, கன்னியாகுமரி, மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஏப். 18-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் உள் தமிழக மாவட்டங்களில் அதிகபட்ச வெப்ப நிலை ஒருசில இடங்களில் வியாழக்கிழமை (ஏப். 16) வரை சற்று அதிகமாக இருக்கும்.
இது குறித்து வானிலை மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடக்கு மத்திய பிரதேசம் முதல் தென் தமிழகம் வரை விதா்பா, மத்திய மகாராஷ்டிரம், மரத்வாடா, உள் கா்நாடகம் வழியாக வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஏப். 13) முதல் ஏப். 18 வரை லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில், திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
Advertisement
மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம், அடையாமடை, தென்காசி மாவட்டம், ஆய்க்குடி ஆகிய பகுதிகளில் தலா 20 மி.மீ. மழை பதிவானது.
வெப்ப நிலை: உள் தமிழக மாவட்டங்களில் அதிகபட்ச வெப்ப நிலை ஒருசில இடங்களில் வியாழக்கிழமை (ஏப். 16) வரை சற்று அதிகமாக இருக்கும். தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக பரமத்தி வேலூரில் 103.1 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
வேலூா்- 102.74, ஈரோடு- 102.2, மதுரை விமான நிலையம்- 101.12, நாமக்கல் - 100.76, திருச்சி- 100.22, தருமபுரி-100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.