தமிழ், தமிழ்நாடு என்றாலே பாஜகவுக்கு வெறுப்பு : மு.க. ஸ்டாலின்
தமிழ், தமிழ்நாடு என்றாலே பாஜகவுக்கு வெறுப்பு என முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியது குறித்து...
தமிழ், தமிழ்நாடு என்றாலே பாஜகவுக்கு வெறுப்பு என முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப். 12) குற்றம் சாட்டினார்.
தூத்துக்குடியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப். 12) பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
Advertisement
''கடலை மிட்டாய், மக்ரூன் போல தூத்துக்குடி மக்களும் இனிப்பானவர்கள். முத்து நகருக்கு முத்துவேல் கருணாநிதி வந்திருக்கிறேன். தூத்துக்குடிக்கு வருவது இது முதல்முறையல்ல.
பல்வேறு நலத்திட்ட விழா, தொழிற்சாலை தொடக்க விழா, ஆய்வுகள் என பல முறை தூத்துக்குடி வந்துள்ளேன். தென் தமிழகத்தின் முதல் டைடல் பூங்கா தூத்துக்குடியில் தொடங்கப்பட்டது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது 10 அமைச்சர்களுடன் தூத்துக்குடிக்கு ஓடி வந்தேன். மத்திய அரசு ஒரு ரூபாய் கூட தராதபோதும் கூட நிவாரண உதவிகளை வழங்கினேன்.
வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. 6 ஆயிரம் வழங்கினோம். இவை அனைத்துக்கும் முக்கிய காரணம், இந்த மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிதான்.
மாவட்டத்திற்காக எப்படியாவது பேசி நலத்திட்டங்களுக்கான அனுமதியை பெற்று விடுகிறார். நாடாளுமன்றத்தில் ஏதேனும் ஓய்வு நேரம் கிடைத்தால், தூத்துக்குடிக்கு வந்துவிடுவார் கனிமொழி.
கிண்டி கத்திப்பாரா, பறக்கும் சாலை, சேது சமுத்திர திட்டம், சாலை துறைமுக விரிவாக்கம் என பல்வேறு திட்டங்கள் திமுக ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. பெரிய அளவில் விரிவுபடுத்தப்படும் சென்னை மெட்ரோ ரயில் திட்டமும் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொடங்கப்பட்டதுதான்.
கோவை, மதுரை, திருச்சிக்கு மெட்ரோ ரயில் திட்டங்களை மறுத்தது போன்று சென்னைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை பாஜக மறுத்திருக்கும். நல்லவேளை மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது சென்னைக்காவது மெட்ரோ திட்டத்தை கொண்டுவந்துவிட்டோம்.
திமுக, காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்தபோது பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால், யார் ஆட்சி செய்தாலும் பாஜக தமிழ்நாட்டிற்கு ஒன்றும் செய்யாது. தமிழ், தமிழ்நாடு என்றாலே அவர்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது.
4 ஆண்டு பாஜகவுடன் எல்லா விஷயங்களையும் சமரசம் செய்துதானே ஆட்சியில் இருந்தார் எடப்பாடி பழனிசாமி. தில்லி பாஜகதான் மிரட்டுகிறது என்றால் வெட்கமில்லாமல் அதை சொல்லி வாக்கு கேட்கிறார் இவர். பழனிசாமி ஆட்சி செய்ததை சொல்லி வாக்கு கேட்டால், ஒரு வாக்கும் கிடைக்காது.
அவர் ஆட்சி செய்த 4 ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டின் உரிமைகள் எல்லாம் காணாமல்போனது. அவரது அலங்கோல ஆட்சி, சந்தி சிரிக்கிறது. முதல்வராக இருந்தவர் போலவா பேசுகிறார் பழனிசாமி.
காலில் விழுந்தோமா, காலை வாரிவிட்டோமா, அடுத்த காலை நோக்கிச் செல்வோமா என்ற மூன்று வாக்கியங்களில் பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை அடங்கிவிடும்'' என விமர்சித்தார்.