வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு!
வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது என டிஜிபி உத்தரவிட்டது பற்றி...
வாக்குச் சாவடிக்குள் தேர்தல் அலுவலரின் அனுமதியின்றி காவலர்கள் நுழையக் கூடாது என்று தமிழ்நாடு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. முந்தைய ஆண்டுகளைவிட கூடுதல் வாக்குகள் பதிவாகி வருகின்றன. பிற்பகல் 3 மணி வரை மட்டும் 70 சதவிகிதத்துக்கும் மேல் வாக்குப்பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், வாக்குச் சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் யாரும் எக்காரணம் கொண்டும் வாக்குச் சாவடி மையத்துக்குள் செல்லக் கூடாது என்று தமிழ்நாடு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Advertisement
காவலர்கள் அனைவரும் வாக்குச் சாவடியின் கதவுக்கு வெளியே நின்று பணிபுரிய வேண்டும் என்றும், வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியின் அனுமதி பெற்றே உள்ளே செல்ல வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற ரோந்துப் பணியில் இருக்கும் காவலர்கள் வயர்லெஸ் கருவி மூலம் தொடர்ந்து அறிவுறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகரக் காவல் ஆணையர்கள் மற்றும் மண்டல காவல்துறை தலைவர்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.