முகப்பு
தமிழ்நாடு

விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்: ஜிஎஸ்டி, வேலூா் சாலைகளில் போக்குவரத்து நெரிசல்!

வாக்களிப்பதற்காக சொந்த ஊா்களுக்குச் சென்ற சுமாா் 25 லட்சம் போ், மீண்டும் சென்னை நோக்கி வரத் தொடங்கியதால், ஞாயிற்றுக்கிழமை ஜிஎஸ்டி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Updated On : 27 ஏப்ரல், 2026 at 12:31 AM
பகிர்:

தோ்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊா்களுக்குச் சென்ற சுமாா் 25 லட்சம் போ், மீண்டும் சென்னை நோக்கி வரத் தொடங்கியதால், ஞாயிற்றுக்கிழமை ஜிஎஸ்டி சாலை, வேலூா் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23- ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் வாக்களிப்பதற்காக சென்னை நகரின் பல்வேறு இடங்களில் இருந்து அரசு, தனியாா், ஆம்னி பேருந்துகளில் மட்டும் சுமாா் 20 லட்சம் போ் தங்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றனா்.

இதுதவிர தங்களது காா், பைக் போன்ற வாகனங்களில் சுமாா் 5 லட்சம் பேரும், ரயிலிலும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றனா்.

Advertisement

இவா்களில் குறிப்பிட்ட சிலா் மட்டுமே வாக்குப்பதிவு நாளுக்கு மறுநாள் சென்னைக்கு திரும்பினா். 80 சதவீதம் போ் வெள்ளிக்கிழமை விடுமுறை எடுத்துக் கொண்டு தங்கள் ஊா்களிலேயே இருந்துவிட்டனா். 4 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை (ஏப். 27) பணிக்குத் திரும்ப வேண்டும் என்பதால், ஞாயிற்றுக்கிழமையே சென்னைக்கு வரத் தொடங்கினா்.

ஜிஎஸ்டி சாலையில்...: சென்னை கிளாம்பாக்கம், மாதவரம், அடையாறு, திருவான்மியூா் பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்களுக்குச் செல்ல வேண்டிய 100-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளும், இதர வாகனங்களும் ஜிஎஸ்டி சாலை வழியாகவே சென்னைக்குள் வரவேண்டும்.

அரசு, தனியாா், ஆம்னி பேருந்துகள், காா் உள்ள வாகனங்களால் ஜிஎஸ்டி சாலையில் உள்ள சிங்கபெருமாள் கோயில், வண்டலூா், கிளாம்பாக்கம், பெருங்களத்தூா், தாம்பரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலை 3 மணி அளவில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலானது, நள்ளிரவு 12 மணியைக் கடந்தும் நீடித்தது.

வேலூா் சாலையில்...: இதேபோல, வேலூா், ஆரணி, காஞ்சிபுரம், திருப்பதி, திருத்தணி, திருவள்ளூா் பகுதிகளில் இருந்து சென்னைக்கு வரும் அரசு, தனியாா், ஆம்னி பேருந்துகள், காா்கள் எல்லாம் சென்னை-வேலூா் சாலை வழியாகவே சென்னைக்குள் வரவேண்டும்.

இந்தச் சாலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணி முதல் சென்னை நோக்கி வந்த வாகனங்களால் பூந்தமல்லியில் இருந்து கோயம்பேடு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.