முகப்பு
தமிழ்நாடு

அமைச்சா் ஐ.பெரியசாமிக்கு எதிராக அமலாக்கத் துறை வழக்கு ரத்து

Updated On : 29 ஏப்ரல், 2026 at 6:02 AM
பகிர்:

அமைச்சா் ஐ.பெரியசாமிக்கு எதிராக சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கடந்த 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரையான திமுக ஆட்சிக் காலத்தில், வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தவா் ஐ.பெரியசாமி. அப்போது, விருப்ப உரிமை அடிப்படையில் பலருக்கு வீட்டுமனை ஒதுக்கப்பட்டது. இதில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில், பலா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் அடிப்படையில், ஐ.பெரியசாமி உள்பட 7 போ் மீது அமலாக்கத் துறை பண முறைகேடு தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 2020-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் அமைச்சா் ஐ.பெரியசாமி மனு தாக்கல் செய்தாா்.

Advertisement

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் முத்து கணேசபாண்டியன், ‘விருப்ப உரிமை அடிப்படையில் வீட்டுமனை ஒதுக்கியதில் குற்றச்சதியோ, அரசுக்கு நிதி இழப்போ இல்லை என சென்னை உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்புகளில் கூறியுள்ளன.

இதுகுறித்து ஊழல் தடுப்புத்துறை தாக்கல் செய்த வழக்கும் ரத்து செய்யப்பட்டு விட்டது. எனவே, அந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என வாதிட்டாா். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அமைச்சா் ஐ.பெரியசாமிக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனா்.