தமிழ்நாட்டில் தோல்வி என்பதால் பட்ஜெட்டில் தமிழ்நாட்டை பாஜக அரசு புறக்கணித்து விட்டதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “வரவிருக்கும் தேர்தல் தமிழ்நாட்டுக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குமான தேர்தல். தமிழுக்கும் தமிழினத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் அடுக்கடுக்கான துரோகங்களை பாஜக செய்கிறது.
அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐ வழக்குகளைக் காட்டி, மிரட்டி, அமைக்கப்பட்டிருக்கிற தேர்தல் கூட்டணியோடு வந்த பிரதமர் மோடி, அதிமுகவின் பெயரைக்கூட சொல்லவில்லை. ஏனெனில், அதிமுக என்பது தனிக்கட்சி கிடையாது; பாஜகவின் கிளை அமைப்பு.
தமிழ்நாட்டில் தோல்வி உறுதி என்பதால், இந்த பட்ஜெட்டிலும் தமிழ்நாட்டை பாஜக அரசு புறக்கணித்திருக்கிறது. இந்த நிலையில், பாஜக ஆட்சி எனக் கூறக் கூச்சப்பட்டு, இரட்டை என்ஜின் ஆட்சி என்று கூறுகின்றனர்.
எடுத்துக்காட்டுகளாக, போதை மருந்து கடத்தலுக்கு குஜராத், குற்றச் சம்பவங்களுக்கு உத்தர பிரதேசம், மாநில பற்றியெரிய வேண்டுமா மணிப்பூர், பட்டியலின மக்களுக்கு எதிராக அதிக வன்கொடுமைகளுக்கு உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம்.
நாட்டுக்கே முன்னோடியான திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருகிறோம். அதிக வளர்ச்சியடைந்த மாநிலமாக தமிழ்நாட்டை திமுக உயர்த்தியிருக்கிறது. இங்கு பாஜகவுக்கு வேலையே இல்லை.
கருத்துக் கணிப்பில் நம்முடைய கூட்டணி 45 விழுக்காடு ஆதரவுடன் முன்னிலையில் இருப்பதாகக் கூறுகிறது. ஆனால், நமக்கான ஆதரவு இன்னும் கூடுதலாகத்தான் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
தமிழ்நாட்டில் நாம் பெறப்போகும் வெற்றி, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழங்கக் கூடிய வெற்றியாக இருக்க வேண்டும். ஒற்றுமை இருக்குமிடத்தில் பாஜகவின் பாசிச எண்ணம் ஒருபோதும் பலிக்காது” என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.