கோவையில் காவல்துறையின் இருசக்கர வாகனத்தை திருடிவந்து, மற்றொரு பைக்கை திருடியவரை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தேடி வருகிறார்கள்.
சாவியுடன் நிறுத்தப்பட்டிருந்த ரோந்து வாகனத்தை எடுத்துச் சென்றவரை சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு அடையாளம் கண்டுபிடித்து விசாரணை நடைபெற்று வரும் சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
காவல்துறை வாகனத்தையே திருடி வந்து, அதை 'எக்ஸ்சேஞ்ச்' செய்வது போல ஓரிடத்தில் விட்டு விட்டு அங்கிருந்த வேறொரு வாகனத்தைத் திருடிச் சென்ற அந்தப் பலே திருடன் யார் ? - காவல் துறை உதவி ஆணையர் தலைமையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவையில் காவல் துறையினரின் ரோந்து வாகனத்தையே திருடி வந்து, மற்றொரு நபரின் இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்ற மர்ம நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, சிவானந்தா காலனி, டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோட்டைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 30-ஆம் தேதி இரவு தனது மோட்டார் சைக்கிளை வழக்கம் போல வீட்டின் அருகே உள்ள சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு உறங்கச் சென்று உள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்த போது, அவரது இருசக்கர வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
காணாமல் போன தனது வாகனத்தைத் தேடிய போது, அந்த இடத்திற்கு அருகிலேயே மற்றொரு மோட்டார் சைக்கிள் சாவியுடன் நிற்பதை அந்த இளைஞர் கவனித்தார். இது குறித்து ரத்தினபுரி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து பார்த்த போது, அங்கு சாவியுடன் நின்ற வாகனம் ரத்தினபுரி காவல் துறையினர் ரோந்து பணிக்குப் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது.
காவல் துறையினரின் வாகனமே அங்கு நின்றதால் குழப்பம் அடைந்த போலீசார், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர், முதலில் ரத்தினபுரி காவல் நிலையத்திற்குச் சொந்தமான ரோந்து மோட்டார் சைக்கிளை காவல் நிலையத்திலிருந்து திருடி உள்ளார்.
அந்தப் போலீஸ் பைக்கிலேயே சிவானந்தா காலனி ராதாகிருஷ்ணன் சாலைக்கு வந்து உள்ளார். பின்னர், அந்தப் போலீஸ் பைக்கை அங்கேயே சாவியுடன் விட்டு விட்டு, அங்கு நிறுத்தி இருந்த உணவக ஊழியரின் பைக்கைத் திருடிக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்து உள்ளார்.காவல்துறை வாகனத்தையே திருடி வந்து, அதை 'எக்ஸ்சேஞ்ச்' செய்வது போல விட்டு விட்டு வேறொரு வாகனத்தைத் திருடிச் சென்ற அந்த திருடன் யார் ? என்பது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
காவல்நிலையத்திலிருந்தே வாகனத்தைத் திருடிச் சென்று பைக்கைத் திருடிய திருடன் பற்றி கோவையில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.