திமுக - தேமுதிக கூட்டணியை விஜயகாந்தின் ஆன்மா வாழ்த்தும் என்று அமைச்சர் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட அன்னவாசல் பேரூராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கள் துறை சார்பில் அம்ருத் 2.0 திட்டம் 2022-2023 கீழ் ரூ. 10.32 கோடி மதிப்பில் குடிநீர் மேம்பாட்டு பணியினை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தொடக்கி வைத்தார்.
பின்னர், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ”ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பேசியதை கூட்டணிக்கு வருவதற்கான அறிகுறியாகவும் எடுத்துக் கொள்ளலாம், திமுகவுக்கு யார் வந்தாலும் முதல்வர் வரவேற்பார்.
திமுக கூட்டணியில் தேமுதிக சேர்ந்துள்ளதால் விஜயகாந்தின் ஆன்மா மன்னிக்காது என்பதை பாஜகவினர் சொல்லக்கூடாது விஜயகாந்தின் வாரிசுகள் சொல்ல வேண்டும். பாஜக விஜயகாந்தின் வாரிசு அல்ல. பாஜக விஜயகாந்துக்கு எதுவும் செய்யவில்லை.
2016ல் விஜயகாந்த் இருக்கும்போது தேமுதிக திமுகவுக்கு வர வேண்டிய சூழல் இருந்தது ஆனால் அதை மடை மாற்றி விட்டார்கள். அதை இன்றைக்கு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் நிறைவேற்றி இருக்கிறார். நிச்சயமாக இந்தக் கூட்டணியை விஜயகாந்தின் ஆத்மா, வாழ்த்தி வரவேற்கும், இது தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான கூட்டணி.
எங்கள் கூட்டணியில் கட்சிகள் கூடுமே தவிர, குறையாது. கூட்டணியில் உள்ளவர்களை தோழமையோடுதான் நடத்துவோம். எல்லாருக்குமான ஆட்சியாகதான் எங்கள் ஆட்சி இருக்கும்.
கூட்டணியில் அதிகமான கட்சிகள் இணைந்தாலும் அவர்களுக்குரிய இடங்களை வழங்குவதில் எங்கள் தலைவரின் சாணக்கியத்தனத்தை விரைபில் பார்ப்பீர்கள்.
விஜய் எங்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது, மூன்றாவது இடத்தில் உள்ள ஆள்களைப் பற்றி எல்லாம் நாங்கள் பேசுவது கிடையாது.
இந்தத் தேர்தலுக்கு ஒவ்வொரு வாக்காளரையும் மூன்று முறை சந்தித்துள்ளோம். புதிய தேர்தல் அணுகுமுறையை உருவாக்கின்ற கூட்டணிதான் திமுக கூட்டணி” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.