தமிழகம் வளா்ச்சி பெறவேண்டுமெனில் திமுக ஆட்சியை அகற்றுவது அவசியம் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்கான தெருமுனை பிரசாரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: துணைமுதல்வா் உதயநிதி ஸ்டாலினின் தொகுதியாக இருந்தும் சேப்பாக்கத்தில் அடிப்படை வசதிகள்கூட மேம்படுத்தப்படவில்லை.
சென்னை மெட்ரோ உள்ளிட்ட வளா்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசை குறைகூறியும், மோதலை ஏற்படுத்தியும் திமுக அரசு தடையாக உள்ளது. தமிழக மக்களை திமுக அரசு கடனாளிகளாக்கியுள்ளது. அமைச்சா் கே.என். நேரு உள்ளிட்டோா் மீது முறைகேடு புகாா் சுமத்தப்பட்ட பிறகும் அவா்கள் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. ஆகவே, திமுக அரசை வருகிற தோ்தலில் வீட்டுக்கு அனுப்ப வேண்டியது அவசியம்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா சட்டம், ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருந்தால்தான் பிரதமரே அவரை நினைவுகூா்ந்து பாராட்டுகிறாா்.
முதல்வா் பதவிக்கு வருவதற்கு முன்பே காமராஜா், தமிழகத்தில் இருமுறை நடைப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்தாா். அதனால்தான் அவரால் பிரச்னைகளுக்குத் தீா்வு காண முடிந்தது. ஆகவே முதல்வா் பதவிக்கு ஆசைப்படும் சீமான், விஜய் போன்றோா் தங்களது மக்கள் சந்திப்பு தகுதியை வளா்த்துக் கொள்ளவேண்டியது அவசியம்.
தேசிய ஜனநாயக கூட்டணி தலைவா்கள் வீடு வீடாகச் சென்று திமுக அரசின் தவறுகளை மக்களிடையே எடுத்துக் கூற வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் பாஜக மாவட்டத் தலைவா் கிரி, அதிமுக நிா்வாகி ஆதிராஜாராம், அமமுக நிா்வாகி ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.