எல்லோருக்கும் பிப்ரவரி மாதம் என்றால் தி.மு.க.வுக்கு இது ‘மாநாடு மாதம்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் இந்து சமய அறநிலையத் துறையின் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 31 கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் நிகழ்ச்சியில் பேசுகையில், இன்றைய நாள், என்னை நினைத்து நானே பெருமை கொள்ளக்கூடிய நாள். அந்த பெருமைக்குக் காரணம் இது போன்ற சிறந்த கல்லூரியை உங்களுக்காக இன்றைக்கு திறந்து வைத்திருக்கிறேன். முகப்பிலிருந்து, வகுப்பறைகள் வரைக்கும் World class போன்று சிறப்பாக வந்திருக்கிறது.
கொளத்தூர் மட்டுமல்லாமல், சென்னையின் பல பகுதிகளைச் சார்ந்த மாணவர்களும், இதனால் பயனடையப் போகிறார்கள். அறநிலையத் துறை சார்பாக, கல்வி எனும் அறப்பணிக்கு இந்தக் கல்லூரி ஒரு சாட்சியாக இருக்கிறது. இங்கே இருக்கக்கூடிய என்னுடைய பாசத்திற்குரிய மாணவர்களுக்கு நான் சொல்வது, கல்வி தான் கடவுள்! கல்வி எனும் கடவுள் உங்கள் எல்லாவற்றையும் வழங்கும்! அதனால் தான், அனைத்து இடங்களிலும் தொடர்ந்து சொல்கிறேன் – படியுங்கள்! படியுங்கள்! படியுங்கள்! அதுதான் உங்களை உயர்த்தும்!
எல்லோருக்கும் இது பிப்ரவரி மாதம்! ஆனால், தி.மு.க.வுக்கு இது ‘மாநாடு மாதம்’. அந்த அளவிற்கு கடந்த 20 நாட்களாக, தமிழ்நாடு முழுவதும் சுற்றி, சுற்றி மாநாடுகளில் நான் பங்கெடுத்து கொண்டு வந்திருக்கிறேன். இளைஞர் அணி மாநாடு; மகளிர் அணி மாநாடு; பாகமுகவர் அணி மாநாடு; மண்டல மாநாடு; பொறுப்பாளர்கள் மாநாடு; மாவட்டச் செயலாளர்கள் மாநாடு; பூத் கமிட்டி மாநாடு; இப்படி பல்வேறு மாநாடுகளை தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறோம்.
மற்றொரு பக்கம், தினமும் காலை, மாலை என்று அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன். அதுவும் கொளத்தூருக்கு வந்தால் கேட்கவே வேண்டாம். ஒரு நிகழ்ச்சிக்கு என்று சொல்லி, பத்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன். பெரிய பெரிய திட்டப்பணிகளை எல்லாம் நான் தமிழ்நாடு முழுவதும் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.
தேசிய அளவிலான ஊடகங்கள் நடத்துகின்ற கருத்தரங்குகளில் கூட நான் கலந்து கொள்கிறேன். காலையில் கூட, ஒரு கருத்தரங்கு நிகழ்ச்சியை முடித்து கொண்ட பிறகு தான் இந்த கொளத்தூருக்கு வந்திருக்கிறேன். மற்றவர்களுக்கு, தொகுதிக்கு சென்று பணிகளை பார்த்துவிட்டு திரும்பி வந்து ரெஸ்ட் எடுத்து உற்சாகம் ஆவார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரைக்கும், கொளத்தூருக்கு வந்து, உங்களுக்காக உழைப்பதுதான் எனக்கு ரெஸ்ட் கிடைப்பதில் உற்சாகம். உங்களுக்கான திட்டங்களை தொடங்கி வைப்பது, நலத்திட்ட உதவிகளை வழங்குவது, உங்களுடன் சேர்ந்து பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகளை கொண்டாடுவது, இவையெல்லாம்தான் எனக்கு பெரிய பூஸ்ட்! ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கும்போது, உங்களை வந்து பார்த்தால் போதும், ரிலாக்ஸ் ஆகிவிடுவேன்; இல்லை ஃபிரி ஆகிவிடுவேன்.
இன்றைக்கு பார்க்கிறீர்கள், இந்தியா முழுவதும் பின்பற்றும் மாடலாக நம்முடைய திராவிட மாடல் இருக்கிறது என்றால், அந்த திராவிட மாடல் அரசின் “மாடல் தொகுதி”-யாக இருப்பது எந்தத் தொகுதி தெரியுமா? நம்முடைய கொளத்தூர்தான் ஒரு மாடல் தொகுதியாக இருக்கிறது. அனைத்து வகையிலும், தன்னிறைவு பெற்ற தொகுதியாக கொளத்தூரை இன்றைக்கு நாம்
வளர்த்தெடுத்து இருக்கிறோம். ஏதோ, தேர்தல் வரும்போது மட்டும் ஒன்றிரண்டு திட்டங்களை திறந்து வைக்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக, ஒவ்வொரு மாதமும் வந்து, உங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.