எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
புதுக்கோட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி
234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெறும் என்று புதுக்கோட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப். 23 ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலினும் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
Advertisement
நேற்று தஞ்சாவூரில் தனது 4-ம் கட்ட சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய அவர் இன்று புதுக்கோட்டை, திருப்பத்தூரில் பிரசாரம் செய்கிறார்.
இதற்காக இன்று காலை புதுக்கோட்டை வந்த அவர் நடைப்பயிற்சியின்போது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"திமுகவின் வெற்றி வாய்ப்பு அமோகமாக சிறப்பாக இருக்கிறது. தோல்வியில் உச்சத்திற்குச் சென்றுவிட்டார் பழனிசாமி. அதனால் விரக்தியில் பேசி வருகிறார்.
இங்குள்ள மக்களின் எழுச்சியைப் பார்த்தால் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெறும். தமிழ்நாட்டிற்கு எத்தனை தலைவர்கள் வந்தாலும், எத்தனை கட்சிகள் வந்தாலும் அவர்கள் என்ன செய்தாலும் திமுக கூட்டணியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
அதிமுகவை தில்லியில் அடமானம் வைத்துவிட்டார்கள். அதிமுகவை குத்தகைக்கு விட்டுவிட்டார்கள். அதனால் தமிழ்நாட்டுக்கும் தில்லிக்கும்தான் போட்டி.
நடிகரின் வாகனத்தின் பின்னால் சென்று இளைஞர்கள் விபத்துக்குள்ளாவதை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விரைவில் திருந்துவார்கள்" எனத் தெரிவித்தார்.