பொங்கல் பரிசுத் தொகை! டோக்கன் வாங்காதோர் என்ன செய்ய வேண்டும்?
பொங்கல் பரிசுத் தொகை பெற டோக்கன் வாங்காதோர் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி
பொங்கல் பரிசுத் தொகுப்பு: பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 3,000 ரொக்கம் வழங்கும் திட்டத்தை சென்னை ஆலந்தூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்த நிலையில், தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இன்றைய தேதியிட்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற டோக்கன் பெற்றவர்கள், இன்று காலை முதலே நியாயவிலைக் கடைகளில் வரிசையில் காத்திருந்தனர். அவர்களுக்கு அரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டு வருகிறது.
நியாய விலைக் கடைகளிலும், வீடு வீடாக வந்தும் டோக்கன் விநியோகிக்கும் பணி நடந்து வந்தது. இந்த நிலையில், இன்று பரிசுத் தொகுப்பு வழங்குவது தொடங்கிவிட்டதால் டோக்கன் வழங்குவது முடிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ஒருவேளை இதுவரை டோக்கன் வாங்காதவர்கள், ஜன. 13ஆம் தேதி நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று பரிசுத் தொகுப்புடன் ரொக்கத்தையும் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. எனினும், இதுவரை டோக்கன் பெறாதவர்கள், அந்தந்த நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று, டோக்கன் பெறாதவர்களுக்கு எப்போது பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்பதை கேட்டறியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கரும்பு மற்றும் பொங்கல் பரிசாக ரொக்கம் ரூ. 3,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
தமிழகத்தில் மொத்தம் 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை வழங்கும் திட்டம் இன்று தொடங்கிய நிலையில் சென்னை ஆலந்தூரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு பொங்கல் தொகுப்பை வழங்கி பணிகளைத் தொடக்கிவைத்தார்.
பல்வேறு மாவட்டங்களில் தமிழக அமைச்சர்கள், பொங்கல் பொருள்களையும், ரொக்கப்பணம் ரூ. 3,000-யும் வழங்கி தொடங்கி வைத்தனர். சில இடங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பணி தொடங்கிய சிறிது நேரத்திலேயே பொங்கல் பரிசு வழங்கும் பணி நிறுத்தப்பட்டது. இதனால், நியாய விலைக் கடைக்கு வந்த மக்கள் ஆங்காங்கே அமைதியாக அமர்ந்திருந்தனர்.
பொங்கல் பண்டிக்கைக்கு முன்னதாக அனைத்து மக்களுக்கும் பொங்கல் தொகுப்பை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்தந்த நியாய விலைக் கடைகள் மூலம் மக்களுக்கு கடந்த மூன்று நாள்களாக டோக்கன் வழங்கப்பட்டு வந்தது. குறிப்பிட்ட தேதியிட்டு டோக்கன் பெற்ற மக்கள், அந்தந்த நாளில் சென்று பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
What should those who have not purchased tokens to receive the Pongal prize money do?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.