குடியரசு நாளையொட்டி ஆளுநர் அளிக்கவுள்ள 'தேநீர் விருந்தில்' விசிக பங்கேற்காது என்று கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் தனது கடமையை ஆற்றாமல் அவையிலிருந்து வெளியேறியிருப்பது அவரது வாடிக்கையான அணுகுமுறைதான். இதில் அதிர்ச்சியடைவதற்கு ஒன்றுமில்லை. அவர் இப்பொறுப்பிலிருக்கும்வரை இத்தகைய அடாவடிகளைத் தொடரவே செய்வார். அதற்கு ஏதேனும் சாக்குபோக்குகளையும் சொல்வார்.
ஆளுநர் உரையில் என்ன இடம்பெற வேண்டுமென்பதை ஆளும் பீடத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகள்தாம் முடிவு செய்வர் என்பது காலம் காலமாக நடைமுறையிலிருந்து வரும் மரபாகும். ஆனால், இவர் தாம் விரும்புவதுபோல 'ஆளுநர் உரை' அமையவேண்டுமென எதிர்பார்க்கிறார். இது அவரது திட்டமிட்ட 'அவை மரபு' மீறலாகும். தொடர்ந்து சட்டப் பேரவையை அவமதிக்கும் அவரது இப்போக்கை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது.
'தமிழ்த்தாய் வாழ்த்து' என்பது அவை நடவடிக்கைகளின் தொடக்கத்திலும் 'தேசிய கீதம்' என்பது அவை நிறைவிலும்தான் இசைக்கப்படும் என்பது அவருக்குத் தெரிந்த ஒன்றுதான். எனினும், தொடக்கத்திலேயே ஏன் இசைக்கவில்லை என்பது குதர்க்கவாதம். இது திமுக அரசுக்கு எதிரான -திட்டமிட்ட உள்நோக்கம் கொண்ட அவதூறு ஆகும்.
சநாதன சக்திகளிடம் வலுப்பெற்றுள்ள 'திராவிடக் கருத்தியலுக்கு' எதிரான 'ஒவ்வாமையின்' வெளிப்பாடுதான் ஆளுநரின் இத்தகைய செயல் என்பதை தமிழ் மக்கள் உணர வேண்டும்.
இந்நிலையில், குடியரசு நாளையொட்டி ஆளுநர் அளிக்கவுள்ள வழக்கமான 'தேநீர் விருந்தில்' விசிக இந்த ஆண்டும் பங்கேற்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.