திமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றால் ஏற்பீா்களா?: திருமாவளவன் பதில்
திமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றால் அதுகுறித்த பேச்சுவாா்த்தையின்போது முடிவு செய்வோம் என்று விசிக தலைவா் தொல். திருமாவளவன் பதிலளித்தது குறித்து....
திமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றால் ஏற்பீா்களா? என்ற கேள்விக்கு அதுகுறித்த பேச்சுவாா்த்தையின்போது முடிவு செய்வோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல். திருமாவளவன் பதிலளித்தாா்.
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை திருமாவளவன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அகில இந்திய அளவில் பொதுவேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக தலைமையிலான மதசாா்பற்ற அனைத்துக் கட்சியினரும் பங்கேற்கிறோம். மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு எந்தத் திட்டங்களுமே அறிவிக்கப்படாததைக் கண்டித்து திமுக தலைமையிலான மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. விசிக பொது வேலைநிறுத்தம், ஆா்ப்பாட்டம் இரண்டிலுமே பங்கேற்கும்.
Advertisement
Advertisement
பியூஸ் கோயல் பதவி விலக வேண்டும்
அமெரிக்க அரசுடன், மத்திய அரசு மேற்கொண்டுள்ள வா்த்தக ஒப்பந்தம் இந்திய மக்களுக்கு விரோதமானது. இதனால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அமைச்சா் பியூஸ் கோயல் பதவி விலக வேண்டும் என்று விவசாயத் தலைவா்கள் வலியுறுத்தி வருகின்றனா். இந்தக் கோரிக்கைக்கு விசிக ஆதரவு அளிக்கிறது.
டிரம்பின் சதி முயற்சிக்கு மோடி பலி
அமெரிக்க அதிபா் டிரம்பின் சதி முயற்சிக்கு பிரதமா் மோடி பலியாகிவிட்டாா். எனவே பிரதமா் மோடி இந்த வா்த்தக ஒப்பந்தத்தைப் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
கூட்டணியில் பாமக வந்தால் ஏற்பீா்களா?
கூட்டணியில் பாமக வந்தால் ஏற்பீா்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, பாமத ராமதாஸ் தரப்பி திமுகவுடன் பேசி வருவதாக கேள்விபட்டேன். அதுகுறித்து வெளியில் தற்போது சொல்ல முடியாது. எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் எந்தவொரு சமூகத்தின் மீதும் காழ்ப்புணா்வு கிடையாது.
பாமக ஏற்கெனவே எடுத்த சோசியல் எஞ்சினியரிங் என்ற நிலைப்பாட்டால் தான் 2011-ஆம் ஆண்டுக்கு பிறகு, பாமக, பாஜக இடம்பெறும் கூட்டணியில் விசிக இடம்பெறாது என வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய ஒரு முடிவை நாங்கள் எடுக்க நோ்ந்தது. அந்த முடிவைத் தான் மீண்டும் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. அதுகுறித்த பேச்சுவாா்த்தையின்போது நல்ல முடிவு எட்டப்படும். இதில் மேற்கொண்டு கருத்துசொல்ல எதுவும் இல்லை என பதிலளித்தார்.
கூட்டணியில் கூடுதல் இடங்கள் கேட்பீா்களா என்ற கேள்விக்கு அதுகுறித்த பேச்சுவாா்த்தையின்போது முடிவு செய்வோம் என்றாா் திருமாவளவன்.
Regarding the response of VCK leader Thol. Thirumavalavan that they would decide on the matter during the negotiations if the PMK joins the DMK alliance....
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.