முகப்பு
தமிழ்நாடு

அதிமுக ஆட்சியில் ஸ்கூட்டி கொடுக்கப்படவில்லையா? கனிமொழிக்கு பதிலடி

திமுக மகளிரணி மாநாட்டில் கனிமொழி பேசியதை பொய் எனக் குறிப்பிட்டு அதிமுக பதில் அளித்துள்ளது குறித்து...

Updated On : 26 ஜனவரி, 2026 at 3:07 PM
தஞ்சை மகளிரணி மாநாட்டில் கனிமொழி / அதிமுக பகிர்ந்துள்ள பதிவிலிருந்து
பகிர்:

கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட அதிமுக ஒன்றும் திமுக அல்ல என அதிமுக விமர்சித்துள்ளது.

அதிமுக கொடுத்த வாக்குறுதியின்படி, பெண்களுக்கு ஸ்கூட்டி கொடுக்கப்படவில்லை என்றும், குலவிளக்குத் திட்டத்தில் மாதம் ரூ. 2 ஆயிரம் கொடுக்கப்படவில்லை என்றும் கனிமொழி குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில், பெண்களுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் ஸ்கூட்டி கொடுக்கப்பட்டதாக அதிமுக குறிப்பிட்டுள்ளது.

தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டியில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்னும் பெயரில் திமுக டெல்டா மண்டல மகளிரணி மாநாடு இன்று (ஜன. 26) நடைபெற்றது.

இதில் தேர்தலில் அதிமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் குறிப்பிட்டு கனிமொழி பேசியதாவது:

''நான் 10 ஆயிரம், 8 ஆயிரம் கொடுக்கிறேன். குலவிளக்கு திட்டத்தில் 2 ஆயிரம் கொடுக்கிறேன் என யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், எதுவும் வராது எனத் தெரியும். முன்பு ஸ்கூட்டி கொடுப்பேன் என சொன்னார்கள். வந்ததா?. அதுபோல குலவிளக்கும் வீட்டுக்கு வராது. ஆனால், மகளிர் உரிமைத் தொகை ஒவ்வொரு மாதமும் உங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்து சேரும்'' என கனிமொழி பேசியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் அதிமுக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

''பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லுங்க கனிமொழி. அதிமுக ஒன்றும் திமுக அல்ல, கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட.

பெண்களுக்கு ஸ்கூட்டியும் அன்றே கொடுத்தார் எடப்பாடியார். தமிழ்நாட்டின் குலவிளக்குகளான தாய்மார்களுக்கு 2026 ஆட்சியில் மாதா மாதம் ரூ. 2000 கொடுத்தே தீருவார்!

வெல்லும் பெண்கள் - என்று பெயர் வெச்சிருக்கீங்க, பொய்யை மட்டும் சொல்லி , உங்களை நம்பி வந்தவர்களை மீண்டும் மீண்டும் தோற்கடிக்காதீங்க!

மற்றவர்கள் ஏமாற மாட்டார்கள், ஏற்கனவே நீங்கள் சொன்ன மதுஒழிப்பு, நகைகடன் தள்ளுபடி போன்ற தொடர் பொய்கள், மக்கள் மனதில் வந்து போகும்'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

summary

Kanimozhi's speech at the DMK women's wing conference as false says admk

முழு கட்டுரையைப் படிக்க →