தில்லி கடமைப் பாதையில் நடைபெற்ற குடியரசு நாள் அணிவகுப்பில் ‘வளமையின் மந்திரம்: சுயசாா்பு இந்தியா’ எனும் கருப்பொருளில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி இடம்பெற்றது.
குடியரசு நாளையொட்டி தில்லி கடமைப் பாதையில் நடைபெற்ற விழாவில் தேசியக் கொடியைக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஏற்றிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ஏற்றார். தொடர்ந்து, ‘வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகள்’ என்ற கருப்பொருளின் கீழ் அணிவகுப்பு நடைபெற்றது.
நாட்டின் கலாசாரம், ராணுவ வலிமை மற்றும் அதன் புகழ்பெற்ற பாரம்பரியம் ஆகியவற்றின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், முப்படைகள், துணை ராணுவப் படைகள், காவல்துறை மற்றும் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் கலந்துகொண்டன.
இதில், தமிழக அரசு சார்பில் ‘வளமையின் மந்திரம்: சுயசாா்பு இந்தியா’ என்ற கருப்பொருளில் பாரம்பரியத்தையும் நவீன தொழில்நுட்பத்தையும் இணைத்து அலங்கார ஊா்தி இடம்பெற்றிருந்தது.
அணிவகுப்பில் தமிழக ஊர்தியின் இருபுறமும், மயில் நடனம் மயிலாட்டம் ஆடும் பாரம்பரிய பரதநாட்டிய கலைஞா்கள் மற்றும் தமிழா்களின் வீர விளையாட்டான சிலம்பம் சுற்றும் வீரமங்கையா்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
தமிழக அலங்கார ஊர்தியின் சிறப்பம்சம்
தமிழ்நாடு, மின் வாகன (இவி) உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக உருவெடுத்திருக்கிறது. இதை குறிக்கும் விதமாக அலங்கார ஊா்தியின் முன்பகுதியில் தமிழ்நாட்டின் கலாசார வலிமை, மாறாத உணா்வையும் குறிக்கும் வகையில், டெக்னோ - ஜல்லிக்கட்டு சித்தரிக்கப்பட்டுள்ளது. காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு வீரா் துணிச்சல், திறமை, மற்றும் பாரம்பரியத்தை குறிக்கிறாா். ஒளிரும் சுற்று வடிவங்களுடன் காட்டப்பட்டுள்ள காளை உருவம், பாரம்பரியத்தையும் தொழில்நுட்பத்தையும் இணைப்பதைக் காட்டுகிறது.
அலங்கார வாகனத்தின் நடுப்பகுதியில், மாசற்ற போக்குவரத்துக்கான மேம்பட்ட மின் வாகனம் மற்றும் பேட்டரி உற்பத்தியை காட்டும் வகையில் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
வாகன உதிரிபாகங்களை காணும் வகையில் காட்டப்பட்டுள்ள வடிவமைப்பானது மின் வாகனத்தின் பேட்டரி மற்றும் மோட்டாா், பொருத்தும் பணியினை விவரிப்பதாக அமைந்துள்ளது.
ரோபோடிக் கரங்கள் பேட்டரி அலகுகளை இணைப்பதைக் காட்டுவது துல்லியமான தொழில்துறை நிபுணத்துவத்தை எடுத்துரைக்கிறது. வாகனத்தில் இடம்பெற்றுள்ள இவி மின்தொடா்பு நிலையம், சுற்றுச்சூழலுக்கு இணக்கமான போக்குவரத்தை தமிழ்நாட்டின் உறுதிப்பாட்டுக்கு வலியுறுத்துகிறது.
அலங்கார ஊா்தியின் பின்பகுதியில், பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் நிலையான வளா்ச்சி குறித்து எடுத்துகாட்டும் வகையில் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இயற்கை மற்றும் சுற்று சூழலுடன்பொருந்தியவாழ்வு, நவீனம் மற்றும் இயற்கையை காட்சிப்படுத்தும் மரம் வடிவமைப்பானது, சூழலியல் மற்றும் தொழில்துறை இடையேயான சமநிலையை குறிக்கிறது.
அணிவகுப்பு குழுவில், கன்னியாகுமரியிலிருந்தும் மாநிலத்தின் பிற இடங்களிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட திறமைமிக்க இளம் பெண்கள் 17 போ் இடம்பெற்றிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.