தமிழக அரசு சார்பில் சென்னையில் இன்றும், நாளையும் (ஜன. 27, 28) நடைபெறும் உலக மகளிர் உச்சி மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் சார்பில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக மகளிர் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.
அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணி வாய்ப்புகளைப் பெறுவதற்கும், பணிகளில் நீடிப்பதற்கும், மீண்டும் பணிக்குத் திரும்புவதற்கும் உதவும் அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான தமிழ்நாட்டின் தொடா்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த மாநாடு நடத்தப்படுவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உலக வங்கியின் மண்டல இயக்குநர் செம் மெட்டே, ஐ.நா. பெண்கள் அமைப்பின் பிரதிநிதி காந்தா சிங், ஒருங்கிணைந்த நாடுகளின் வளர்ச்சி இயக்க (யுஎன்டிபி) இந்திய பிரதிநிதி ஏஞ்சலா லுசிகி, மோரீஷஸ் தலைமை கொறடா நவீனா ரம்யாத், தொழில் துறை, கல்வித் துறை, பெருநிறுவன சமூகப் பொறுப்புத் திட்ட (சிஎஸ்ஆர்) பங்காளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
இரு நாள்களிலும் 11 கருப்பொருள்களில் அமர்வுகள் நடைபெறவுள்ளன. மேலும், இதில் 70-க்கும் மேற்பட்ட ஆளுமைகள் பேசவுள்ளனர். நிறைவு விழாவுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகிக்கிறார்.
நிறைவு விழாவில், பெண்கள் திறன் மேம்பாடு மற்றும் முறையான வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு ஆதரவளிக்கும் மாநில அளவிலான பிரசாரம் தொடங்கப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.