நாமக்கல்: லாரி, சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் பலி!
லாரி, சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் பலியானது தொடர்பாக...
நாமக்கல்: நாமக்கல் நகரப் பகுதியில், லாரி, சரக்கு வாகனம், இருசக்கர வாகனம் ஆகியவை மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே செவ்வாய்க்கிழமை அதிகாலை பலியாகினர்.
திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அதன் பின்னால் மினி சரக்கு வாகனம் ஒன்றும் வந்தது.
நாமக்கல்-திருச்சி சாலை ரயில்வே மேம்பாலத்தில் வந்தபோது முன்னால் சென்ற லாரி மீது சரக்கு வாகனம் மோதி, சுழன்று திரும்பியதில் அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் மீது மோதியது.
அவர்கள் மூவரும் நிகழ்வு இடத்திலேயே பலியாகினர். சரக்கு வாகன ஓட்டுநரும் பலத்த காயமடைந்தார்.
அவருக்கு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சரக்கு வாகன ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் வாகனத்தை இயக்கியதால் விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இறந்தவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்தும், விபத்து தொடர்பாகவும் நாமக்கல் நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.