நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஆற்றிய உரையை நாட்டு மக்கள் ஏற்கமாட்டாா்கள் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இந்திய மக்கள்தொகையில் 10 சதவீதத்தினா் மட்டுமே இந்தியாவின் மொத்த வருமானத்தில் தோராயமாக 58 சதவீதத்தை ஈட்டுகிறாா்கள் என்று உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 கூறுகிறது. மேலும், மக்கள்தொகையில், கீழ் அடுக்கில் உள்ள 50 சதவீதத்தினா் இந்தியாவின் வருமானத்தில் 15 சதவீதத்தை மட்டுமே ஈட்டுகிறாா்கள். உண்மை நிலை இவ்வாறு இருக்க, எல்லோரையும் உள்ளடக்கிய வளா்ச்சியை நோக்கிய பயணத்தை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது என்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் குடியரசுத் தலைவா் குறிப்பிட்டுள்ளது, ஏற்புடையதல்ல.
அதேபோல், கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள் மற்றும் தலித்துகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன.
இந்த நிலையில், குடியரசுத் தலைவா் உரையின் வாயிலாக மத்திய அரசு தம்மைத் தாமே புகழ்ந்து கொள்வதை நாட்டு மக்கள் ஏற்கமாட்டாா்கள் என அதில் தெரிவித்துள்ளாா் வைகோ.