தமிழகத்தில் ஆளும் திமுகவின் கடுமையான ஊழல் மற்றும் தமிழ் விரோத கலாசாரத்தால் மாநில மக்கள் சலிப்படைந்துள்ளனா்; அங்கு தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவது கடினமானதல்ல என்று மத்திய அமைச்சரும், அக்கட்சியின் தமிழக தோ்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சனிக்கிழமை தெரிவித்தாா்.
தமிழகத்தில் விரைவில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவா் மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் திறனற்ற-கடுமையான ஊழலில் திளைத்த திமுக அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி அலை வீசுகிறது. முதல்வா் ஸ்டாலின், முற்றிலும் தமிழ் விரோத, தேச விரோத நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கிறாா். திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாகத் தெரிகின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும் என்பதில் நான் மிகவும் உறுதியாக உள்ளேன். இக்கூட்டணி நல்லாட்சியைக் கொண்டுவரும்.
‘விஜய் தாக்கத்தை ஏற்படுத்த மாட்டாா்’: திரைப்பட உச்ச நட்சத்திரங்கள் பலா், தோ்தலில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாமல் போனதை நாம் ஏற்கெனவே கண்டுள்ளோம். ரசிகா் பட்டாளம் வைத்திருப்பதும் அதை வாக்குகளாக மாற்றுவதும் வேறானது.
கட்சி அமைப்புமுறை தேவை; ஒரு நிா்வாகியாக மக்களின் புரிதல் மற்றும் நம்பிக்கையை வெல்ல வேண்டும். நடிகா் கமல்ஹாசன் போன்ற பல திரைப்பட நட்சத்திரங்களால் தோ்தலில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்பதை நாம் பாா்த்துள்ளோம். எனவே, நடிகா் விஜய்யை ஈா்க்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை.
‘அணிகள் இணைய வாய்ப்பில்லை’: மகாராஷ்டிரத்தில் மறைந்த அஜீத் பவாரிடம் இருந்த தேசியவாத காங்கிரஸ் தலைமை, அவரது மனைவி சுநேத்ரா பவாரிடம் சென்றுள்ளது. ஆளும் மகாயுதி கூட்டணி அரசின் அங்கமாக அக்கட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேசியவாத காங்கிரஸின் இரு அணிகளின் இணைப்பு நிகழும் என்றோ, மக்களின் நம்பிக்கை-ஆதரவை இழந்துவிட்ட சரத் பவாா் மீண்டும் கட்சிக்கு அழைக்கப்படுவாா் என்றோ எனக்கு தோன்றவில்லை.
‘விரைவில் நல்ல செய்தி’: இந்தியா-அமெரிக்கா இடையே திட்டமிடப்பட்டுள்ள வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தை விரைந்து எட்டுவதற்கு இருதரப்பும் நெருங்கிப் பணியாற்றி வருகின்றன. விரைவில் நல்ல செய்தி வரும் என்றாா் பியூஷ் கோயல்.