அனைவரும் மகிழ்ச்சி, திருப்தியடையும் வகையில் தொகுதிப் பங்கீடு அமையும்: பியூஷ் கோயல்
அனைவரும் மகிழ்ச்சி, திருப்தியடையும் வகையில் தொகுதிப் பங்கீடு அமையும் என்று மத்திய அமைச்சரும், பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
அனைவரும் மகிழ்ச்சி, திருப்தியடையும் வகையில் தொகுதிப் பங்கீடு அமையும் என்று மத்திய அமைச்சரும், பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்காக திங்கள்கிழமை சென்னை வந்த அவரை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை செந்தரராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அப்போது செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைக்கும்.
திமுக அரசு மீது மக்கள் விரக்தி மற்றும் அதிருப்தியில் இருக்கின்றனர். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் தோல்வியை சந்திக்கின்றன. மகாராஷ்டிரம், ஹரியாணா என ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸை மக்கள் நிராகரிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கான அரசு வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர்.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக வரவேண்டும் என தமிழக மக்கள் விரும்புகின்றனர். ஊழல் கறை படிந்த திமுக கூட்டணியை வீழ்த்த அதிமுக தலைமையில் கூட்டணி உருவாகியுள்ளது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் அமர்ந்து பேசி தொகுதிப் பங்கீட்டு விவரங்களை அறிவிப்போம்.
அனைவரும் மகிழ்ச்சி மற்றும் திருப்தியடையும் வகையில் தொகுதிப் பங்கீடு அமையும். இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டு பேச்சு இன்னும் முடிவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.