மார்ச் 23ல் பியூஷ் கோயல் சென்னை வருகை? அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு கையெழுத்து?
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வருகை பற்றி...
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் நாளை மறுநாள்(மார்ச் 23) சென்னை வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி நாளை மறுநாள்(திங்கள்கிழமை) அதிமுக - பாஜக இடையே தொகுதிப்பங்கீடு கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தொகுதிப் பங்கீடு குறித்து கட்சிகளிடையே மும்முரமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அதிமுக - பாஜக இடையே தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படாமல் உள்ளது. தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் அமைச்சர் பியூஷ் கோயல் இந்த வாரம் சென்னை வரவிருந்த நிலையில் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.
அதேநேரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணியில் உள்ள டிடிவி தினகரன், அன்புமணி ஆகியோர் தில்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துள்ளனர்.
இபிஎஸ் உள்ளிட்டோர் தில்லி சென்றது திமுகவினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தொகுதிப் பங்கீடு குறித்து உறுதி செய்ய தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் நாளை மறுநாள்(மார்ச் 23) சென்னை வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருகிற மார்ச் 30 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ளதால் வரும் வாரத்தில் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு இறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் பாஜக குறைந்தது 30 தொகுதிகளையாவது பெறும் என்றும் கூறப்படுகிறது.