முதல்வர் விஜய் குறித்து அவதூறு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!
திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளது பற்றி...
முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று(ஜூலை 3) கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் ஜூன் 20 ஆம் தேதி திருச்செந்தூரில் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் அத்தொகுதியின் எம்எல்ஏவும் திமுக முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில், தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது தவெக நகரச் செயலர் செல்வம் என்பவர் புகார் அளித்தார். இந்தப் புகாரின்பேரில் ஆத்தூர் போலீஸார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
Advertisement
Advertisement
இந்த வழக்கில் முன்பிணை கோரி அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 7 முறை எம்எல்ஏவாக இருப்பவர், இப்படி பேசலாமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சிறிது நேரத்திலேயே, திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏவாகவும் உள்ளார்.
இன்று காலை ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வுக்கு சென்றபோது, அங்கேயே ஆத்தூர் காவல்துறையினர் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். அவருடன் இருந்த திமுக ஆதரவாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறை வாகனத்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், தன்னுடைய வாகனத்தில் வர அனிதா ராதாகிருஷ்ணன் அனுமதி கேட்ட நிலையில், காவல்துறையினர் அனுமதி மறுத்து தங்களுடைய வாகனத்திலேயே கூட்டிச் சென்றனர். அவர் தற்போது தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Defamatory remarks against the Chief Minister vijay: Anitha Radhakrishnan arrested
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.