சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்
கல்விச் சிந்தனை அரங்கில் தமிழிசை செளந்தரராஜன் பேசியது குறித்து...
சமூக வலைதளங்களில் இருந்து, இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச் 2, 3) நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு 2026-ல் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், திமுக எம்.பி., கனிமொழி சோமு கலந்துகொண்டனர். இந்த விவாத நிகழ்வை தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் ஒருங்கிணைத்தார்.
இதில், இளைஞர்களை மேம்படுத்துதல் : இந்தியாவின் அரசியல் மாற்றம் என்ற தலைப்பில் தமிழிசை செளந்தரராஜன் பேசியதாவது:
Advertisement
Advertisement
'' எந்தக் காலமாக இருந்தாலும் அரசியலில் இளைஞர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. ஆனால், இக்கால இளைஞர்கள் சமூக வலைதளங்களில் மூழ்கியுள்ளனர். ஆக்கப்பூர்வகாம சமூக வலைதளத்தில் செயல்பட்டாலும் களத்தில் இருந்து அவர்கள் செயல்பட வேண்டியது அவசியம்.
சமூக வலைதளத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதைப்போன்று களத்திலும் இளைஞர்கள் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நாட்டில் அதிக எண்ணிக்கையில் செல்போன் உற்பத்தி செய்யப்படுகிறது. இணையப் பயன்பாடும் அதிகமாக உள்ளது. நாட்டில் உள்ள மக்கள் தொகை இதற்கு மிக முக்கிய காரணம்.
நாட்டில் உள்ள மக்கள் அதிக எண்ணிக்கையில் செல்போன் பயன்படுத்துவதற்கு டிஜிட்டல் இந்தியா மிக முக்கிய காரணம். தொழிலதிபர் முதல் சாலையோர வியாபாரி வரை டிஜிட்டல் முறைக்கு மாறியுள்ளனர்.
பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. போதைப்பொருள் பயன்பாடு மிகப்பெரிய சவாலாக உள்ளது. அரசியல் கட்சிகளாலும் இளைஞர்கள் மூளைச் சலவை செய்யப்படுகின்றனர்.
சமூக ரீதியாக இளைஞர்கள் மேம்பட்டுள்ளனர். சமூக வளைதள பயன்பாட்டில் மேம்பட்டுள்ளனர். ஆனால், போதைப்பொருள் பயன்பாடு கவலை அளிக்கிறது.
இளைஞர்களை மேம்படுத்துவதில் மிக முக்கியமான கருவி கல்வி. அதுவே அரசியலை நோக்கி இளைஞர்களை நகர்த்தும். சரியான முறையில் இளைஞர்கள் வழிநடத்தப்பட வேண்டும்.
இளைஞர்களிடமிருந்து அரசியல்வாதிகள் அதிக யோசனைகளைப் பெற வேண்டும். அதனை நடைமுறையில் செயல்படுத்த வேண்டும். நாட்டில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் இருப்பதைப்போன்று சட்டப்பேரவையிலும் நாடாளுமன்றத்திலும் அதிக இளைஞர்கள் இருக்க வேண்டும்.
பாஜகவில், தேசிய தலைவர் 45 வயதில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாவட்ட தலைவர்கள் 45 வயதுக்குள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டவர்களில் பெரும்பாலும் 45 வயதுக்குட்பட்டவர்கள்.
திமுக இளைஞர் அமைப்பில் இருந்து வளர்ந்திருந்தாலும், அரசியல் ரீதியாக இளைஞர்களை மேம்படுத்தும் கட்சியாக பாஜக மட்டுமே உள்ளது. இது நிரூபிக்கப்பட்ட ஒன்று. இளைஞர்களை மேம்படுத்தும் கட்சிகளுடன் இணைந்து பாஜக செயல்படுகிறது.
தமிழ் எனக்கும் தாய்மொழிதான். புதிய கல்விக் கொள்கையில் 8 ஆம் வகுப்பு வரை தாய் மொழி கல்வியையே வலியுறுத்துகிறது. அது தாய் மொழியை புறக்கணிக்கவில்லை.
ஹிந்தி கற்கவில்லை என எனக்கும் வருத்தம் உள்ளது. நான் தெலங்கானா முதல்வராக இருந்தபோது தெலுங்கு கற்றுக்கொண்டு அம்மாநில பழங்குடி மக்களை சந்தித்தேன். புதிய மொழியை கற்பது அறிவுப்பூர்வமானது.
பல தனியார் பள்ளிகளில் ஹிந்தி மொழி கற்பிக்கப்படுகிறது. அதனை ஏன் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தக் கூடாது? மூன்றாவது மொழி வேண்டாம் என்றால், தனியார் பள்ளிகளிலும் இரு மொழிக் கொள்கையை கடைபிடிக்க வேண்டும். மூன்றாவது மொழி ஹிந்தி அல்ல, வேறு எந்தவொரு மொழியாகவும் இருக்கலாம்'' என தமிழிசை பேசினார்.
ThinkEdu 2026 Senior BJP leader Tamilisai speaks about the drug menace in Tamil Nadu
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.