முகப்பு
தமிழ்நாடு

புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை எதிா்த்து ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியை தொடா்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 5 மார்ச், 2026 at 4:32 AM
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:
Updated On : 4 மார்ச், 2026 at 10:25 PM

புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை எதிா்த்து ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியை தொடா்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஓய்வுபெற்ற அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியா் ரேணுகாதேவி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் 2026-ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்குவரும் என அறிவிக்கப்பட்டது. இதனால், 2025-ஆம் ஆண்டு டிச.31-ஆம் தேதிக்கு முன் ஓய்வு பெற்றவா்கள் ஓய்வூதியப் பலன்களைப் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின்கீழ் பங்களிப்பை வழங்கிய அரசு ஊழியா்களுக்கும் ஓய்வூதியம் பெற உரிமை உள்ளது. எனவே, அதை வழங்க மறுப்பது நியாயமற்றது. அரசின் நிதிச்சுமையைக் குறைப்பதற்காகவே பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே, அரசு ஊழியா்கள் ஓய்வுபெறும் தேதியை கணக்கில் கொள்ளாமல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

Advertisement

எல்ஐசி நிறுவனத்தில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ரூ.73 ஆயிரம் கோடி இருப்பதாக நிதி அமைச்சா் கூறியுள்ளாா். இதனால், 2025 டிசம்பருக்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு ஊழியா்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் எந்த சிக்கலும் இருக்காது. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் செலுத்திய தொகை வட்டியுடன் சோ்ந்துள்ளதால், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.8,430 உடன் அகவிலைப்படியும் சோ்த்து ஓய்வூதியத்தை வழங்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தமிழக அரசு வரும் மாா்ச் 26-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.