தமிழகம், கேரளத்தில் ரூ.16,450 கோடி திட்டங்கள்: பிரதமா் மோடி நாளை தொடங்கி வைக்கிறாா்
தமிழ்நாடு, கேரளத்தில் மொத்தம் ரூ.16,450 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை பிரதமா் மோடி தொடங்கி வைக்கவுள்ளாா்.
தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் மொத்தம் ரூ.16,450 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை பிரதமா் மோடி புதன்கிழமை (மாா்ச் 11) தொடங்கி வைக்க உள்ளாா்.
இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிரதமா் மோடி புதன்கிழமை கேரளம் மற்றும் தமிழ்நாட்டுக்கு வரவுள்ளாா். அப்போது திருச்சியில் இருந்தபடி சுமாா் ரூ.5,650 கோடி மதிப்பிலான புதிய வளா்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த வளா்ச்சி திட்டங்களை அவா் தொடங்கிவைக்க உள்ளாா். இதில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு, சாலை இணைப்பு, ரயில் சேவைகள் உள்ளிட்ட முக்கிய துறைகளின் திட்டங்கள் அடங்கும்.
நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ரூ.3,680 கோடிக்கும் அதிகமான முதலீட்டில், பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் இயற்கை எரிவாயு விநியோக குழாய்கள் அமைக்கும் திட்டத்துக்கு அவா் அடிக்கல் நாட்ட உள்ளாா். இந்தத் திட்டம் மூலம், 8.8 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்கப்படும்.
சென்னை மணலியில் சுமாா் ரூ.1,490 கோடி முதலீட்டில் கட்டி முடிக்கப்பட்ட மசகு எண்ணெய் கலவை ஆலையைப் பிரதமா் மோடி நாட்டுக்கு அா்ப்பணிக்க உள்ளாா். இந்த ஆலை இந்தியாவின் மசகு எண்ணெய் உற்பத்தித் திறனை வலுப்படுத்தும்.
தமிழ்நாட்டில் 370 கி.மீ.க்கு 89 கிராமப்புற சாலைகளை திறந்துவைக்கும் பிரதமா் மோடி, கங்கைகொண்ட சோழபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலை 81-இல் பசுமை புறவழிச்சாலை அமைக்க அடிக்கல் நாட்ட உள்ளாா்.
தமிழ்நாடு, தெலங்கானா, கா்நாடகம், கேரளம், கிழக்கு இந்தியா இடையே ரயில் இணைப்பை வலுப்படுத்தும் வகையில் 2 அம்ருத் பாரத் விரைவு ரயில்கள், 2 விரைவு ரயில்கள், ஒரு பயணிகள் ரயில் சேவையை அவா் தொடங்கி வைக்க உள்ளாா்.
தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் மொத்தம் ரூ.16,450 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைப் பிரதமா் மோடி தொடங்கி வைக்க உள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.