முகப்பு
தமிழ்நாடு

பாமக கொடி, சின்னம் விவகாரம்: ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு

பாமக கொடி, சின்னம் தொடர்பாக அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Updated On : 18 மார்ச், 2026 at 2:51 AM
சென்னை உயர்நீதிமன்றம்
பகிர்:

பாமக கொடி, சின்னம் தொடர்பாக அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், இந்த வழக்கை சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் விசாரணைக்கு எடுக்க உத்தரவிட்டது.

பாமக பெயர், சின்னம் மற்றும் கொடி ஆகியவற்றை பயன்படுத்த அன்புமணி உள்ளிட்டோருக்கு தடை விதிக்கக் கோரி அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் தன்னை இணைக்கக் கோரி அந்தக் கட்சியின் பொதுச் செயலர் வடிவேல் ராவணன் தாக்கல் செய்த மனுவை உரிமையியல் நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி டி.வி.தமிழ்செல்வி உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இந்தத் தடையை நீக்கக் கோரி ராமதாஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்புமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் என்.எல்.ராஜா, வழக்குரைஞர் கே.பாலு ஆகியோர், பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்தும், மாம்பழம் சின்னத்தை ஒதுக்கீடு செய்தும் தேர்தல் ஆணையம் கடிதங்களை அனுப்பியுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 2 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Advertisement

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டால், இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது. எனவே, இந்த வழக்குகளை சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு விசாரணைக்கு எடுக்க வேண்டும் என வாதிட்டனர். இதையடுத்து நீதிபதி, தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிட்ட நிலையில், ராமதாஸ் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரித்து உரிமையியல் நீதிமன்றம் எப்படி உத்தரவிட முடியும்? இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன?

பாமக தலைவர் பதவிக்கு ராமதாஸ் எப்போது தேர்வு செய்யப்பட்டார்? அந்தப் பதவிக்கு கட்சிக்குள் தேர்தல் ஏதாவது நடத்தப்பட்டதா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதற்கு ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் அருள், வடிவேல் ராவணன் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய தயாராக இருக்கிறோம். இது உட்கட்சி பிரச்னை. அதற்கும் தேர்தல் நடைமுறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே, வழக்கை தொடர்ந்து விசாரிக்க உரிமையியல் நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்குகளில் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் அது தேர்தல் நடைமுறைக்கு இடையூறாக இருக்கும். எனவே, உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது. உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து இடைக்கால மனுக்கள் மீதான விசாரணைக்கும் தடை விதித்து, அனைத்து வழக்குகளையும் மே 10}ஆம் தேதிக்குப் பின்னர் உரிமையியல் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.