திமுக - விசிக தொகுதிப் பங்கீடு பேச்சு! இன்று கையெழுத்தாகிறது!
திமுக - விசிக இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்பாக...
திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் இடையே இன்று(மார்ச் 18) மாலை 2 ஆம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
தொகுதிகளின் எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டு, இன்று மாலையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, கூட்டணி கட்சிகளுடன் திமுக பேச்சு நடத்தி வருகிறது. அதன்படி, விசிக தலைவர் தொல். திருமாவளவன் தலைமையிலான குழுவினருடன், திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான குழு தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை, அக்கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்ச் 2 ஆம் தேதி நடத்தியது.
அப்போது, போட்டியிட விரும்பும் தொகுதிகளுக்கான பட்டியலை திமுக குழுவிடம் விசிக குழு வழங்கியது.
அன்று நடைபெற்ற திமுக - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) இடையேயான முதல்கட்ட தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில், திமுக கூட்டணியில் விசிக-வுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கிடையே இன்று(மார்ச் 18) மாலை 2 ஆம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தொகுதிகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டவுடன் இன்று மாலையே ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் விசிக 4 தனித் தொகுதிகள், 2 பொதுத் தொகுதிகள் என 6 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த முறை விசிகவுக்கு 5 தனி தொகுதிகள், 3 பொது தொகுதிகள் என 8 தொகுதிகள் ஒதுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.