திமுகவில் இணைந்த விசிக முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு!
பனையூர் பாபு திமுகவில் இணைந்தது குறித்து...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு இன்று(ஜூன் 7) திமுகவில் இணைந்தார்.
அண்மையில், விசிகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு, தனது ஆதரவாளர்களுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுவில் இணைந்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இணைப்பு விழாவில், ஆதரவாளர்கள் 1200 பேருடன் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.
Advertisement
Advertisement
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எதிர்த்து அந்தக் கட்சியின் ஊடகப்பிரிவு முதன்மைச் செயலரும், செய்யூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான பனையூர் பாபு அந்தக் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
”விசில் அடிப்பவர்கள் எல்லாம் திரையரங்கத்துக்குதான் செல்ல வேண்டும், சட்டப்பேரவைக்கு வரக் கூடாது. பெரியார் ஈவெராவும், அம்பேத்கரும் பேசிய அரசியலையும் கொள்கைகளையும் வீழ்த்துவதற்கு வந்தவர் விஜய் என்று பேசிய தொல். திருமாவளவன், தற்போது தவெகவுடன் கைகோக்கவும், இயக்கத்தின் கொள்கையை மழுங்கடிக்கவும் முற்படுவது முரண்பாட்டின் உச்சமாக இருக்கிறது.
விசிக பயணித்துக்கொண்ட கொள்கையிலும், எடுக்கும் நிலைப்பாட்டிலும் உறுதியாக இல்லாமல் அடிக்கடி நிலைப்பாடுகளை மாற்றி, குழப்பத்திலும் அவநம்பிக்கையிலும் செயல்படும் தலைமையின் கீழ் இனியும் தன்னால் பயணிக்க இயலாது. இது எனது மனசாட்சியை உணர்த்துகிறது.
எனவே, விசிகவில் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் முழுமையாக விலகுகிறேன்” என்று தெரிவித்து விசிகவில் இருந்து விலகிய நிலையில், இன்று திமுகவில் இணைந்தார்.