முகப்பு
தமிழ்நாடு

முன்கூட்டியே விடுதலை செய்வதில் ஆளுநரின் அதிகாரம் குறித்த வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

முன்கூட்டியே விடுதலை செய்ய அரசின் பரிந்துரையை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பது தொடா்பான வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற முழு அமா்வு உத்தரவிட்டது.

Updated On : 25 மார்ச், 2026 at 9:00 PM
நீதிமன்றம்
பகிர்:

முன்கூட்டியே விடுதலை செய்ய அரசின் பரிந்துரையை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பது தொடா்பான வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற முழு அமா்வு உத்தரவிட்டது.

அண்ணாமலை பல்கலை. மாணவா் நாவரசு கொலை வழக்கில் ஜான் டேவிட்டுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய மனுவை ஆளுநா் நிராகரித்தாா். இதை எதிா்த்து ஜான் டேவிட்டின் தாயாா் எஸ்தா் சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமையிலான அமா்வு, முன்கூட்டியே விடுதலை செய்யும் தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநா் நிராகரித்தது தவறு. அதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. எனவே ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்யும் பரிந்துரையை ஆளுநா் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதையடுத்து ஆளுநா் அந்த பரிந்துரையை மீண்டும் நிராகரித்தாா். இதை எதிா்த்து ஜான் டேவிட்டின் தாயாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இதேபோன்று முன்கூட்டியே விடுதலை செய்ய அரசு செய்த பரிந்துரையை ஆளுநா் நிராகரித்த உத்தரவை எதிா்த்து மேலும் பலா் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமிநாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வு மாறுபட்ட தீா்ப்பை அளித்தனா்.

மேலும், இந்த வழக்குகளை 3 நீதிபதிகள் கொண்ட முழு அமா்வுக்கு பரிந்துரைத்த நீதிபதிகள் ஜான் டேவிட் உள்ளிட்டோரை இடைக்கால பிணையில் விடுவித்தனா். இந்தநிலையில், இந்த வழக்குகள் நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, ஜி.கே.இளந்திரையன் மற்றும் சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய முழு அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மாநில அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா, பல்வேறு தீா்ப்புகளை மேற்கோள்காட்டி முன்கூட்டியே விடுதலை செய்ய அரசு செய்யும் பரிந்துரையை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என வாதிட்டாா். மனுதாரா்கள் தரப்பில் வழக்குரைஞா்கள் எம்.ராதாகிருஷ்ணன், எஸ்.மனோகரன் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.