கட்சியில் இருந்து வெளியேறும் பெண்கள் மீது துஷ்பிரயோகம்: தவெக மீது மகளிர் ஆணையத்தில் புகார்
தவெகவிலிருந்து வெளியேறும் பெண்கள் மீது அவதூறு பரப்பப்படுவதுடன், துஷ்பிரயோகமும் செய்யப்படுவதாக திமுக நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் புகார்
தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து வெளியேறும் பெண்கள் மீது அவதூறு பரப்பப்படுவதுடன், துஷ்பிரயோகமும் செய்யப்படுவதாக திமுக நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து, செய்தியாளருடன் ரஞ்சனா நாச்சியார் பேசுகையில், “நான் முன்னதாக தவெகவில் இருந்தேன். ஆனால், அதன் தலைவர் மேடையில் பெண்கள் குறித்து ஏற்றுக்கொள்ள முடியாத சில கருத்துகளைக் கூறியதால், அக்கட்சியில் இருந்து வெளியேறினேன்.
கட்சித் தொண்டர்களைச் சந்திக்க அவர் ஒருபோதும் தயாராக இல்லை.
யூடியூப் விடியோக்கள் மூலம் தொடர்ந்து என் மீது அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததுடன், என்னை துஷ்பிரயோகம் செய்ததாக மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளேன். கட்சியைவிட்டு வெளியேறும் அனைத்து பெண்களும், மோசமான வார்த்தைகள் மற்றும் அச்சுறுத்தும் அழைப்புகளால் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றனர்.
விஜய் அவரது தொண்டர்களின் இந்த துஷ்பிரயோக நடவடிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சியிலிருந்து வெளியேறிய பெண்கள் மீதான துஷ்பிரயோகத்தை நிறுத்த விஜய் பொறுப்பேற்க வேண்டும்.
இதனாலேயே, அக் கட்சியிலிருந்து வெளியேற பெண்கள் பயப்படுகின்றனர்.
வாக்குகளைப் பெறுவதற்காக விஜய் அரசியல் நாடகம் போடுகிறார். பொறுப்பற்ற தலைவரை தமிழக பெண்கள் தேர்வுசெய்ய மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.
பாஜகவின் கலை, கலாசார பிரிவின் மாநிலச் செயலராக இருந்த ரஞ்சனா, மும்மொழிக் கொள்கை திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக தவெக தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் மீது விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்த ரஞ்சனா, அக்கட்சியில் இருந்து விலகி, திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.