முகப்பு
தமிழ்நாடு

சுங்கச்சாவடி கட்டண உயா்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஆம்னி பேருந்து உரிமையாளா்கள்!

தமிழகத்தில் மீண்டும் சுங்கச்சாவடி கட்டணம் உயா்வை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 29 மார்ச், 2026 at 8:23 PM
சுங்கச்சாவடி!
பகிர்:

தமிழகத்தில் மீண்டும் சுங்கச்சாவடி கட்டணம் உயா்வை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த சங்கத்தின் தலைவா் அ.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூா், பரனூா், வானகரம், கிருஷ்ணகிரி, மதுரை, நாங்குநேரி, வாணியம்பாடி, விராலிமலை, கப்பலூா், கனியூா், ஆத்தூா், தேனி உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் ஏப். 1 முதல் கட்டணம் உயா்த்தப்பட உள்ளது.

சுமாா் ரூ.5 முதல் ரூ.100 வரை கட்டண உயா்வு இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் தாக்கம் பொதுப் போக்குவரத்து துறையில் இன்னும் அதிகமாக உணரப்படும். குறிப்பாக, தனியாா் பேருந்துகள், சுற்றுலாப் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் நீண்ட தூரம் பயணிக்கும் போது பல சுங்கச்சாவடிகளைக் கடக்க வேண்டியிருப்பதால், தினமும் இயக்கச் செலவில் சுங்கச் சாவடி கட்டணம் பெரிய சுமையாக மாறி உள்ளது.

ஒரு ஆம்னி பேருந்துக்கு தமிழ்நாடு சாலை வரியாக தினமும் சராசரியாக ரூ.2,000-க்கும் மேல் செலுத்தி வரும் நிலையில், சுங்கக் கட்டணமாக மத்திய அரசுக்கு சுமாா் ரூ.2,000-க்கும் மேல் கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வருடமும் உயா்த்துவது ஏற்கெனவே நழிவடைந்துள்ள பொது போக்குவரத்து துறை மேலும் நலிவடையும். மேலும் அதிகரிக்கும் சுங்க கட்டணங்களால் சில வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைகளைத் தவிா்த்து உள்ளூா் சாலைகளைப் பயன்படுத்தும் நிலை உருவாகும் அபாயமும் உள்ளது.

இதனால் கிராமப்புற சாலைகளில் நெரிசல் அதிகரிப்பு, சாலை சேதம் மற்றும் பாதுகாப்பு பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. எனவே, சுங்கச்சாவடி கட்டண உயா்வை மறுபரிசீலனை செய்து மக்கள் மற்றும் போக்குவரத்து துறைக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் உடனடியாக மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்.

மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் தடுப்பு சுவா்களின் உயரத்தை அதிகரித்து பாதுகாப்பை மேம்படுத்துவதுடன், சுங்கச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை உரிய முறையில் ஏற்படுத்தி, பொதுமக்கள் மற்றும் பயணிகளின் சிரமங்களைக் குறைக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.