ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்
முதல்வர் விஜய் தன்னுடைய முதல் உரையில் தெரிவித்தது குறித்து.
ஜெயித்துவிட்டதால் ஆட்டம் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்க வேண்டாம் என்று தவெகவினருக்கு முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் 13-ஆவது முதல்வராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் இன்று(மே 10) காலை 10.15 மணியளவில் பதவியேற்றார். தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்பின்னர், 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து, மக்கள் முன்னிலையில் முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டார். ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டம் என்ற கோப்பில் முதல் கையொப்பமிட்டார் விஜய்.
Advertisement
இதனைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் தன்னுடைய முதல் உரையை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
பெரிய பொறுப்பை என்னிடம் கொடுத்து உள்ளீர்கள், எனக்கு அவகாசமும் கொடுங்கள். நான் சொன்னதைப் படிப்பாக நிறைவேற்ற முயற்சிப்பேன், நிறைவேற்றுவேன். அவகாசம் கொடுத்தால் எனக்கு உதவியாகவும் ஒத்துழைப்பாகவும் இருக்கும்.
யாரைவது சந்திக்க வேண்டாம் என்றால், முகத்தை மூடிக்கொண்டு சந்திப்பதோ, மறைமுகமாக உங்களுக்கு தெரியாமல் சந்திப்பதோ, அப்படி எல்லாம் செய்யமாட்டேன், எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக ஒளிவு மறைவின்றி நான் செய்வேன்.
மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசாகூட தொட மாட்டேன், எனக்கு அவசியமும் இல்லை. இந்த விஜய் தப்பு செய்ய மாட்டான், தப்பு செய்யவிடவும் மாட்டான்.
ஜெயித்துவிட்டோம் என ஆட்டம் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்க வேண்டாம். ஆட்டம் ஆடுவோம் என நினைத்தால் அந்த எண்ணத்தை இந்த நிமிடமே அழித்துவிடுங்கள்.
முன்பு இருந்த அரசு கஜானாவை சுத்தமாக காலி செய்து விட்டு சென்றுவிட்டனர். என் அரசில் ஒரே அதிகாரம்தான். பல அதிகார மையங்கள் எல்லாம் இல்லை. தமிழக அரசின் தற்போதை நிலைமை குறித்து வெள்ளி அறிக்கை வெளியிடுவேன்” என்றார்.