ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்
முதல்வராக்க முயற்சி நடந்ததாக வெளியான தகவல்களுக்கு திருமாவளவன் விளக்கம்...
என்னை முதல்வராக்க, திமுகவோ அதிமுகவோ அதிகாரபூர்வமாக யாரும் என்னை அணுகவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று காலை செய்தியாளர்களுடனான சந்திப்பில், 'அதிமுக - திமுக மற்றும் அதிலுள்ள கூட்டணி கட்சிகள் இணைந்து என்னை முதல்வராக்க முயற்சி நடந்ததாக எனக்கும் தகவல் வந்தது' எனக் கூறியிருந்தார்.
ஆனால், அதிமுக - திமுக இணைந்து திருமாவளவனை முதல்வராக்க முயற்சித்தாக பலரும் பேசி வரும் நிலையில் திருமாவளவன் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.
Advertisement
இதுபற்றி திருமாவளவன் வெளியிட்டுள்ள விளக்கத்தில்,
"இன்று செய்தியாளர்கள் சிலர் என்னை சந்தித்தார்கள். அப்போது பல்வேறு கேள்விகளைக் கேட்டார்கள்.
அப்போது, "தங்களை முதல்வராக்க நடந்த முயற்சியை காங்கிரஸ் முறியடித்துவிட்டதாகச் சொல்கிறார்களே" - என்று ஒருசெய்தியாளர் கேட்டார். அதற்கு நான், 'அப்படியொரு முயற்சி நடந்ததாக எனக்கும் தகவல் கிடைத்தது' என்று பதிலளித்தேன்.
எனக்கு நெருங்கிய நண்பர்கள் சிலர் என்னை அணுகி அதைப் பற்றி பேசினார்கள் என்பதையே கூறினேன். 'திமுகவோ அதிமுகவோ அதிகாரபூர்வமாக யாரும் என்னை அப்படி அணுகவில்லை. நானும் யாரிடமும் பேசவில்லை.
நேற்றும் இன்றும் இதுகுறித்து ஊடகங்களில் உறுதிபடுத்தப்படாத செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் முதல்வர் ஆகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை என்பது அனைவரும் அறிந்த கசப்பான உண்மையாகும்.
இந்தியாவில் உத்தர பிரதேசம், ஆந்திரம், மகாராஷ்டிரம், பிகார் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலித்துகள் முதலமைச்சர்களாக ஆட்சி பீடத்தில் கோலோச்சிய வரலாறு நடந்தேறியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இன்னும் ஒரு நூறாண்டானாலும் அது கனவாகவே இருக்கும் என்பதை அறிந்தவன் நான்.
எனினும், இன்றைய அரசியல் சூழலில் அப்படியொரு பேச்சு நடந்ததாக சொல்லப்பட்டது. ஆகவே, 'எனக்கும் தகவல் கிட்டியது' என்று ஒரு ஊடகப் பணியாளரின் கேள்விக்கு நான் விடையிறுத்தேன்.
அதனைத் திரித்து 'பிறிதொரு பொருளைத்தரும் உள்நோக்கத்தோடு' ஒரு சில ஊடகங்கள் செய்திகளைப் பரப்புவது வேதனையளிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.