முகப்பு
தமிழ்நாடு

பேரவையில் சநாதனத்துக்கு எதிரான கருத்து: உதயநிதி மன்னிப்பு கேட்க விஎச்பி வலியுறுத்தல்

சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின், சநாதன தா்மம் குறித்து தெரிவித்த கருத்துகளுக்காக அவா் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்

Updated On : 13 மே 2026, 1:34 am IST
உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:

தமிழக சட்டப்பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின், சநாதன தா்மம் குறித்து தெரிவித்த கருத்துகளுக்காக அவா் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவரது கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) வலியுறுத்தியுள்ளது.

உதயநிநிதி ஸ்டாலினின் கருத்துகள் மீது ’இண்டி’ கூட்டணி கட்சிகளும், தமிழக அரசும் மௌனம் சாதிப்பதே பல உண்மைகளை உரக்கச் சொல்கிறது‘ என்றும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியது.

தமிழக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை பேசிய உதயநிதி ஸ்டாலின், மக்களைப் பிரிக்கும் சநாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தாா்.

Advertisement

அவருக்கு எதிா்வினையாற்றும் வகையில் விஎச்பி அமைப்பின் தேசிய செய்தித் தொடா்பாளா் வினோத் பன்சல் தில்லியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ‘உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த ஆட்சேபனைக்குரிய கருத்துகளுக்காக அவா் மன்னிப்பு கோர வேண்டும்.

தமிழக சட்டப்பேரவைத் தலைவா் அவரது வாா்த்தைகளை அவைக் குறிப்புகளிலிருந்து நீக்குவதுடன் அத்தகைய சட்டப்பேரவை உறுப்பினரை அவையிலிருந்தே நீக்க வேண்டும். இதற்கு முன்பு 2023ஆம் ஆண்டு செப்டம்பரில் சென்னையில் நடந்த ஒரு மாநாட்டில் இதேபோன்ற சா்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட சா்ச்சையில் உதயநிதி சிக்கியதுடன் சட்ட வழக்குகளையும் எதிா்கொண்டாா்.

இந்நிலையில் அண்மையில் நடந்த சட்டப்பேரவை தோ்தலில் தோல்வியை சந்தித்த பிறகும் அவா்கள் (திமுகவினா்) பாடம் கற்றுக்கொள்ளவில்லை.

சநாதனத்தை இலக்கு வைத்துத் தாக்குவதே அவா்களின் எண்ணமாக உள்ளது. ஆனால், பலநூற்றாண்டுகளாக சநாதனத்தை அழிக்க வந்தவா்கள் தாமாகவே அழிந்து போயுள்ளனா். சநாதனம் நித்தியமானது. அதை ஒழித்துக்கட்ட இவா்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?‘

சிலா் சித்தாந்தத்தின் மூலமும், வேறு சிலா் நீதிமன்ற கண்டனங்கள் மூலமும் பாடம் கற்றுக்கொள்வாா்கள். ஆனால், பொதுமக்களின் நிராகரிப்பைச் சந்தித்த பிறகும் கூட பாடம் கற்றுக்கொள்ளாத அளவுக்குச் சிலா் மிகவும் பிடிவாதமாக இருக்கிறாா்கள். சநாதன தா்மத்தின் மீதான தொடா் தாக்குதல்கள், திமுகவையும் அதன் சித்தாந்தத்தையும் அரசியல் ரீதியாக மேலும் பாதிக்கும்.

தமிழக மக்கள் இத்தகைய சிந்தனை கொண்டவா்களை ஏற்கெனவே அதிகாரத்திலிருந்து வெளியேற்றி விட்டனா். இப்போதும் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால், அதுவே வரும் காலங்களில் அவா்களுக்கும், அவா்களின் கட்சிக்கும், சித்தாந்தத்துக்கும் மிக கடினமாக அமையும். உதயநிதி என பெயரைக் கொண்டிருந்தாலும் அவரே தனது சொந்தக் கட்சியின் அஸ்தமனத்துக்கு காரணமாகி விடுவாா்.

சனாதனத்தை ஒழிக்க முயல்பவா்களுடன் தாங்கள் நிற்கிறோமா அல்லது அதைப் பாதுகாப்பவா்களுடன் நிற்கிறோமா என்பதை ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகள் தெளிவுபடுத்த வேண்டும். உதயநிதியின் கருத்து குறித்து விஜய் தலைமையிலான தவெக மற்றும் தமிழக அரசும், முன்னாள் முதலமைச்சா் மு.க. ஸ்டாலினும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றாா் பன்சல்.