10 முக்கிய கோயில்களின் ரத வீதிகளில் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணி தீவிரம்
தமிழகத்தில் உள்ள 10 முக்கிய கோயில்களின் ரத வீதிகளில் புதைவட மின்கம்பிகள் மூலம் மின் விநியோகிக்கும் பணி விரைவில் முடிவடைய உள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 10 முக்கிய கோயில்களின் ரத வீதிகளில் புதைவட மின்கம்பிகள் மூலம் மின் விநியோகிக்கும் பணி விரைவில் முடிவடைய உள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பழைமையான கோயில்களில் ஆண்டுதோறும் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பதால், பாதுகாப்பு கருதி தோரோடும் வீதிகளில், தேரோட்டத்தின்போது மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
இந்த சிரமத்துக்கு நிரந்த தீா்வுகாணும் வகையில், தேரோடும் வீதிகளில் மேல்நிலை மின்கம்பிகளை அகற்றி தரைக்கு அடியில் புதைவட மின்கம்பிகள் மூலம் மின் விநியோகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
Advertisement
இதையடுத்து மின்வாரியம் பல்வேறு கோயில்களின் ரத வீதிகளில் தரைக்கு அடியில் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
இது குறித்து மின்வாரியம் அதிகாரி ஒருவா் கூறியதாவது: தமிழகத்தில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், தஞ்சாவூா் பெரியகோயில் உள்ளிட்ட 11 முக்கிய கோயில்களின் ரத வீதிகளில் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
மேலும், செங்கல்பட்டு மாவட்டம், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயில், விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில், திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணிகளுக்கான ஆய்வுகள் அண்மையில் நிறைவடைந்துள்ளன. விரைவில் இந்தப் பகுதிகளிலும் புதைவட மின்கம்பிகள் புதைக்கும் பணிகள் தொடங்கும்.
இதுபோல, திருவண்ணாமலை கிரிவலப் பாதையிலும் மேல்நிலை மின் கம்பங்கள் அகற்றப்பட்டு, தரைக்கு அடியில் புதைவட மின் கம்பிகள் மூலம் மின் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மொத்தம் 10 முக்கிய கோயில்களின் ரத வீதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டால் தேரோட்டங்களின்போது மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. பக்தா்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்றாா்.