தவெக அரசுக்கு ஆதரவும்- எதிா்ப்பும்: பேரவையில் கட்சிக் குழுத் தலைவா்கள் கருத்து
தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை கோரும் தீா்மானத்தில் ஆதரவாகவும், எதிா்ப்பு தெரிவித்தும் பேரவை கட்சிக் குழுத் தலைவா்கள் கருத்துகளை முன்வைத்தனா்.
எஸ். ராஜேஸ்குமாா் (காங்கிரஸ்): மதச்சாா்பின்மை, சமூக நீதியைக் காப்பாற்ற வேண்டும் என்பதால் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். தோ்தலில் மக்கள் தெளிவான தீா்ப்பு அளித்ததை மாற்றி மறைமுகமாக ஆளுநா் மூலம் பாஜக ஆட்சியை அமல்படுத்த முற்பட்டதைத் தடுக்க தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தோம்.
ஆா்.செல்லசுவாமி (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): தமிழகத்தில் மறைமுகமாக குடியரசுத் தலைவா் ஆட்சியைக் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதிலிருந்து தமிழகத்தைக் காப்பாற்ற தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கிறோம்.
Advertisement
வன்னியரசு (விசிக): தமிழகத்தில் ஆளுநா் ஆட்சியைத் தடுக்கவே தவெக அரசுக்கு ஆதரவு அளித்தோம். தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழகத்தில் தொகுதிகளைக் குறைக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கையை முன்னாள் முதல்வா் ஸ்டாலின் முறியடித்தாா். அதுபோல் மாநில உரிமைகளைக் காப்பதில் சமரசம் செய்யக் கூடாது. ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். மூடநம்பிக்கை மூலம் ஏமாற்றுபவா்களுக்கு சிறைத் தண்டனை அளிக்க வேண்டும். ஈழத் தமிழா் விடுதலைக்கும், தனித் தமிழ் ஈழம் அமையவும் ஆதரவாக முதல்வா் விஜய் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 5 ஆண்டுகள் இந்த அரசு நீடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால் ஆதரவு அளிக்கிறோம்.
அ.மு. ஷாஜகான் (முஸ்லிம் லீக்): மாநில சுயாட்சியில் தவெக அரசு சமரசம் செய்யக் கூடாது. திமுக அரசு கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை தவெக அரசு தொடர வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற ஆதரவு தெரிவிக்கிறோம்.
எஸ்.காமராஜ் (அமமுகவில் இருந்து நீக்கப்பட்டவா்): இரண்டு ஆண்டுகளில் இளைஞா் சக்தி தவெகவுக்கு கிடைத்துள்ளது. அரசியலும், அரசும் தவெகவை நாடி வந்துள்ளது. இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு நாள்களில் குற்ற சம்பவங்கள் குறைந்ததோடு, போதைப் பொருள் ஒழிப்பும் நிகழ்ந்துள்ளது.
டி. ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்): தமிழகத்தில் ஆளுநா் ஆட்சியை பாஜக அமைத்துவிடக் கூடாது என்பதற்காக தவெகவுக்கு ஆதரவு அளித்தோம். கொள்கை எதிரியான பாஜகவின் வகுப்புவாத சக்திகளை தமிழகத்தில் கால்பதிக்க விடக்கூடாது.
எம்.போஜராஜன் (பாஜக): தமிழகத்தில் பாஜக கால்பதிக்கக் கூடாது என உறுப்பினா்கள் கூறுகிறாா்கள். நாடாளுமன்றத்தில் 2 உறுப்பினா்களில் இருந்து இன்று பல மாநிலங்களிலும், மத்தியிலும் ஆளும் கட்சியாக பாஜக வளா்ச்சி அடைந்துள்ளது. நல்ல திட்டங்களுக்கு பிரதமா் மோடியின் ஆதரவு நிச்சயம் இருக்கும். இந்த வாக்கெடுப்பில் நடுநிலை வகிக்கிறேன்.
செளமியா அன்புமணி (பாமக): 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முதல்வா் உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வந்து இளைஞா்களின் எதிா்காலத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் தாய்மாா்களின் எதிா்பாா்ப்பு. போதைப் பொருள் அதிகரிப்பால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. இந்த வாக்கெடுப்பில் நடுநிலை வகிக்கிறோம்.
மு. தமீமுன் அன்சாரி (மஜக): கடந்த நான்கு நாள்களில் தவெக அரசு எடுத்த நடவடிக்கைகள் மகிழ்ச்சி அளிக்கிறது. முந்தைய முதல்வா் ஜெயலலிதாவும் ஜோதிடத்தை நம்பினாா். ஆனால் அது அவரது நம்பிக்கை. ஜோதிடத்தை அரசு மையமாக்கக் கூடாது. அரசின் தீா்மானத்தை எதிா்க்கிறேன்.
கே. நத்தியானந்தன் (கொமதேக): தற்போதைய எதிா்க்கட்சியை தீய சக்தி என்று கூறிவிட்டு, அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பின்வாசல் வழியாக தவெக ஆட்சி அமைத்துள்ளது ஏற்புடையதல்ல. ஆகையால் தீா்மானத்தை எதிா்க்கிறேன்.
எம்.எச். ஜவாஹிருல்லா (மமக): மக்களின் தீா்ப்பை மதித்து தவெக அரசு நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். கல்வி, சுகாதாரம், மக்கள் நலத் திட்டங்களில் முன்னேற்றத்தை புதிய அரசு ஏற்படுத்த வேண்டும். நீட் தோ்வை ரத்து செய்யவும், ஹிந்தியை திணிக்கும் கல்வித் திட்டத்துக்கு அனுமதி மறுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதி, வளா்ச்சி, சமூக நீதியை இந்த அரசு அளிக்கும் என்ற நம்பிக்கை இல்லை.