இரவிங்கு தீயாய்... ! சென்னையில் பகல் போலவே இரவிலும் வீடுகளுக்குள் வெப்பம்! ஆய்வில் அதிர்ச்சி
சென்னையில் பகல் நேரத்தைப் போலவே வீடுகளுக்குள் வெப்பம் வீசுவதாக ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மாநகரில் இரவிலும் குளிர்ச்சியில்லாமல், பகல் நேரத்தைப் போலவே வீடுகளுக்குள் வெப்பம் வீசுவதாக ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.
பொதுவாக பகல் நேரத்தில் வெய்யில் எவ்வளவுதான் வாட்டினாலும் இரவில் சற்று குளிர்ச்சி ஏற்படும் சூழல் மாறி வருவதாக வானிலை ஆய்வுகள் அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளன.
வெய்யில் காலங்களில் மட்டுமல்ல, தற்போதெல்லாம் சென்னையில் சாதாரண காலங்களிலும் இரவில் வீடுகளுக்குள் வெப்ப நிலை குறைவதில்லை என்பதை வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Advertisement
அதாவது, சிறிய மற்றும் நடுத்தர வீடுகளுக்குள் இரவில் வெப்பநிலையானது 32 டிகிரி செல்சியஸ் அளவில் இருப்பதாகவும், இது ஒரு ஆண்டில் கிட்டத்தட்ட 8 மாதங்கள் இப்படியே நீடிப்பதாகவும் அதாவது 5800 மணி நேரங்கள் மக்கள் வீடுகளுக்குள் கடுமையான வெப்பத்தில்தான் வாழ்வதாகவும் வெகு அரிதாகவே வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குறைவதாகவும் ஆய்வுகள் வெளியாகியுள்ளன.
பொதுவாக வீடுகளுக்குள் இரவில் வெப்பம் அதிகமாக இருப்பதை மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள் என்றாலும், அதனை ஆய்வுகள் மூலம் தரவுகளாக அறியும்போது சற்று அதிர்ச்சி அதிகரிக்கவே செய்கிறது.
இந்தியாவில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் வாழும் வீடுகளில் எடுக்கப்பட்ட வெப்பநிலை குறித்த ஆய்வில், கான்கிரீட் தளங்கள் பகல் நேரங்களில் வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டுவிடுகின்றன. இரவில் வெளிப்புறம் குளிர்ச்சியடையும்போது, கான்கிரீட் தளங்களிலிருந்து வெப்பம் வீடுகளுக்குள் பரவி கிட்டத்தட்ட 34 டிகிரி செல்சியஸ் வரை வீடுகளுக்குள் வெப்பம் பரவுகிறது. இன்னும் நள்ளிரவு வரை இந்த வெப்பம் அதிகரிக்கவே செய்கிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் முதல் 2026 ஏப்ரல் மாதம் வரை கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளில் வீடுகளுக்குள் இரவில் நீடிக்கும் வெப்பமானது கவலைய ஏற்படுத்துவதாகவும், பகல் நேரத்தைப் போலவே, இரவிலும் வீடுகளுக்குள் வெப்பம் உணரப்படுவதாகவும் எப்போதாவதுதான் வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குறைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிமெண்ட் கான்கிரீட் தளங்கள், சுவர்கள் பகல் நேர வெப்பத்தை தக்க வைத்துக் கொள்கின்றன. வீடுகளுக்குள் போதிய ஜன்னல் வசதிகள் இல்லாமல் இருப்பது, தொடர்ச்சியாக வீடுகள், போன்றவை, இரவு நேர குளிர்ச்சியை வீடுகளுக்குள் இருப்பவர்கள் அனுபவிக்க முடியாமல் போகிறதாம்.
குளிர்சாதன வசதி கொண்ட வீட்டில் வாழ்வோருக்கு பிரச்னை இல்லை, ஆனால், வெறும் மின் விசிறியை நம்பி வாழ்பவர்கள் ஆண்டில் எட்டு மாதங்களுக்கும் மேல் இந்த சூழலில்தான் வாழவேண்டியிருக்கிறது. அதிக வெப்பம், காற்றோட்டமின்மை போன்றவற்றுடனே பெரும்பாலான மக்கள் அதிகநேரம் வாழ வேண்டியிருப்பது பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.