யாரையும் காப்பாற்றும் முயற்சி வேண்டாம்! என்மேல் குறை சொன்னாலும் பரவாயில்லை! மு.க. ஸ்டாலின்
தோல்விக்கான காரணம் குறித்து கள ஆய்வு செய்யவுள்ள குழுவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்...
சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய, நியமிக்கப்பட்ட குழுவுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று(மே 16) ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் தோல்வி குறித்து கள ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட 36 பேர் கொண்ட குழுவுடன் இந்த ஆலோசனை நடைபெற்றது.
இதன்பின்னர் மு.க. ஸ்டாலின், கள ஆய்வுக் குழுவினருக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
Advertisement
Advertisement
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்ய 36 பேர் கொண்ட குழுவினரை நியமித்திருந்தேன்.
இன்று அவர்களுடனான சந்திப்பில் இந்த ஆய்வை எப்படி மேற்கொள்வது என சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன்.
நீங்கள் ஒவ்வொருவரும் தலைமைக் கழகத்தின் பிரதிநிதிகளாக, எனது சார்பில் அனுப்பி வைக்கப்படுபவர்கள். எனது காதுகளாகச் செல்பவர்கள்.
தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே வந்து என்னிடம் சொல்வது மட்டுமே உங்கள் வேலை.
நீங்கள் யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம். யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது.
இரண்டு பேர் கொண்ட குழுவாகத்தான் யாரையும் சந்திக்க வேண்டும். ஒருவர் மட்டும் தனியாகச் சந்திக்கக் கூடாது.
கழகத்தினரை மனதுவிட்டுப் பேச அனுமதியுங்கள். அவர்களின் குறைகளை, தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை அவர்கள் கொட்டித் தீர்க்கட்டும்.
தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை. அதைக் குறித்து வைத்து உங்களது அறிக்கையில் வழங்குங்கள்.
நிர்வாகிகளின் உணர்வு என்ன? அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? அது மட்டும்தான் எனக்குத் தேவை.
டாக்டரிடம் பொய் சொல்லக் கூடாது என்பார்கள். இப்போது நானும் அந்த இடத்தில்தான் இருக்கிறேன். என்னிடம் எதையும் மறைக்காதீர்கள்.
நோய் என்னவென்று தெளிவாகத் தெரிந்தால்தான் அதற்கு மருந்து கொடுக்க முடியும்.
கழகத்தினர் உங்களிடம் சொல்லும் தகவல்களை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. குறிப்பாக, சம்பந்தப்பட்ட நபர்களிடம் சொல்லக் கூடாது.
அப்படி செய்தால் இந்த ஆய்வின் நோக்கமே வீணாகிவிடும்.
பிரச்னைகளைச் சரிசெய்து, நம்மை மாற்றிக் கொண்டால்தான் அடுத்த 100 ஆண்டுகளுக்கு உயிர்ப்போடு இயங்க முடியும்.
நீங்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில்தான் கழகத்தில் மாற்றங்கள், சீர்திருத்தங்களைச் செய்யப் போகிறேன்.
அதனால் ஸ்கேன் ரிப்போர்ட்போல துல்லியமாக இது இருக்க வேண்டும்.
ஜூன் 5-க்குள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இதன் மீதான நடவடிக்கைகளை ஜூன் மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும்.
உடன்பிறப்புகளின் உண்மையான உணர்வினை அறிந்து வந்து சொல்லுங்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.
Do not attempt to save anyone: M.K. Stalin issues instructions to committee to study election results
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.