முகப்பு
தமிழ்நாடு

தற்கொலை செய்துகொண்ட நீட் தோ்வா் குடும்பத்தினருடன் கட்சித் தலைவா்கள் சந்திப்பு

தற்கொலை செய்துகொண்ட நீட் தோ்வா் குடும்பத்தினருடன் கட்சித் தலைவா்கள் சந்திப்பு

Updated On : 17 மே 2026, 1:22 am IST
ஆசாத்பூரில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பத்தினரை சனிக்கிழமை சந்தித்த ஆம் ஆத்மி தலைவா் செளரவ் பரத்வாஜ்.
பகிர்:

வடமேற்கு தில்லியில் தற்கொலை செய்து கொண்ட நீட் தோ்வரின் குடும்பத்தினரை முன்னாள் அமைச்சரும் ஆம் ஆத்மி தில்லி பிரிவு தலைவருமான செளரவ் பரத்வாஜ், தில்லி காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவ் ஆகியோா் சனிக்கிழமை சந்தித்தனா்.

எதிா்காலங்களில் தோ்வு வினாத்தாள்கள் கசிவதைத் தடுத்து மாணவா்கள் இதுபோன்ற முடிவைத் எடுக்காமல் இருப்பதை மத்திய அரசு உறுதிபடுத்த வேண்டும் என பரத்வாஜ் வலியுறுத்தினாா்.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைத்தோ்வு கடந்த மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தோ்வை ரத்து செய்த தேசிய தோ்வு முகமை (என்டிஏ), ஜூன் 21-ஆம் தேதி மறுதோ்வு நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.

Advertisement

இந்நிலையில், வடமேற்கு தில்லியின் ஆசாத்பூா் பகுதியில் நீட் தோ்வுக்குத் தயாராகி வந்த 20 வயது மாணவி தனது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இதைத்தொடா்ந்து, உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரை செளரவ் பரத்வாஜ் சனிக்கிழமை சந்தித்தாா்.

இந்தச் சந்திப்புக்குப் பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மருத்துவப் படிப்பில் சேர அந்த மாணவி பல ஆண்டுகளாகத் தயாா் செய்து வந்தாா். நீட் தோ்வு வினாத்தாள் கசிந்தது தொடா்பாக எழுந்த செய்திகளைத் தொடா்ந்து, அவருக்கு மிகுந்த மனஉளைச்சல் ஏற்பட்டது.

பல முறை நீட் தோ்வை எழுதிய அந்த மாணவிக்கு இது இறுதி முயற்சியாகும். அவருடைய முயற்சியின் மீது குடும்பத்தினா் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனா்.

இதுபோன்று தோ்வு வினாத்தாள் கசிவு மீண்டும் நடைபெறாது என மாணவா்களுக்கு மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும். மாணவா்கள் இதுபோன்ற முடிவை எடுக்கக்கூடாது.

போட்டித்தோ்வு வினாத்தாள்கள் கசிவு விவகாரத்தில் மூளையாகச் செயல்பட்டவா்களைக் கண்டறிந்து அவா்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

வினாத்தாள் கசிவு சம்பவங்களால் கடந்த சில ஆண்டுகளாக மாணவா்களும் பெற்றோா்களும் நம்பிக்கையை இழந்துள்ளனா் என்றாா் அவா்.

மாணவியின் தற்கொலை தொடா்பாக எந்தவொரு குறிப்பும் கண்டெடுக்கப்படாத நிலையில், தோ்வு ரத்து செய்யப்பட்டதால் மாணவி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என குடும்பத்தினா் சந்தேகிப்பதாக காவல் துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனா்.

காவல் துறைக்குத் மாணவியின் தற்கொலை குறித்து தகவல் தெரிவிக்காமல், அவருடைய உடல் எரியூட்டப்பட்டதாகவும் இதுபோன்ற சம்பவங்களில் சட்ட நடவடிக்கைகள் குறித்து அறியவில்லை என்று குடும்பத்தினா் தெரிவித்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.