விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் போலீஸார் குவிப்பு!
விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் போலீஸார் குவிப்பு பற்றி..
விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்துக்கு அதிமுகவின் இரு தரப்பினர் வருகை தர உள்ளதாக வந்த தகவலைத் தொடர்ந்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலராக இருந்து வந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு, முன்னாள் நகரச் செயலர் இரா. பசுபதி புதிய மாவட்டச் செயலராக நியமித்து அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து புதிய மாவட்டச் செயலர் பசுபதி வியாழக்கிழமை விழுப்புரம் வந்து கட்சித் தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தை ஒப்படைக்கவும், சாவியை பெற்றுத் தரக் கோரியும் மாவட்டக் காவல் அலுவலகத்தில் மாவட்டச் செயலர் பசுபதி மனு அளித்தனர்.
Advertisement
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்துக்கு இரு தரப்பினரும் வரலாம் என வெளியான தகவலைத் தொடர்ந்து போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். மேலும், அதிமுக அலுவலகம் அமைந்துள்ள பகுதியின் இரு புறங்களிலும் போலீஸார் தடுப்புகள் அமைத்து கண்காணிப்புப் பணியை மேற்கொண்டனர். இந்த நிலையில் விழுப்புரம் கோட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை (மே 18) பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் இரு தரப்பினரும் அதில் பங்கேற்க வேண்டும் என்று கோட்டாட்சியர் முருகேசன் அறிவித்துள்ளார்.