அமைச்சரவை விரைவில் விரிவாக்கம்? யார் எவருக்கு வாய்ப்பு?
தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் பற்றி...
தமிழ்நாடு அமைச்சரவை இந்த வார இறுதியில் விரிவாக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
மே 10 ஆம் தேதி தமிழ்நாட்டின் முதல்வராக ஜோசப் சி. விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், முதல்வர் மற்றும் 9 அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை அறிவிப்பு வெளியானது.
இன்னும் போக்குவரத்துத் துறை, உயர்க் கல்வித் துறை, வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை, வேளாண் துறை, பால்வளத் துறை, மீன்வளம் மற்றும் கால்நடைத் துறை போன்ற பல்வேறு முக்கியமான துறைகளுக்கு அமைச்சர்கள் ஒதுக்கப்படாமல் உள்ளன.
இதனால் அமைச்சர்கள் இல்லாத துறைகள் சார்ந்த பணிகள் தொய்வடையும் சூழல் நிலவுகிறது.
மேலும், 2026 -2027 ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் தயாரிக்கும் பணிகளும் தாமதமாகியுள்ளன. அனைத்து துறைகளுக்கும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் தலைமையில் ஆலோசனைக்குப் பிறகு துறை சார்ந்த அறிக்கைகள் வழங்கப்பட்ட பிறகே, பட்ஜெட்டை தயாரிக்க முடியும்.
இந்த நிலையில், இந்த வார இறுதிக்குள் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாருக்கெல்லாம் வாய்ப்பு?
தற்போதைய தவெக அமைச்சரவையில் கீர்த்தனா மட்டுமே பெண் அமைச்சராக இருக்கும் நிலையில், அமைச்சரவை விரிவாக்கத்தில் பெண் எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு வாய்ப்பளிக்கப்படும் எனத் தெரிகிறது.
அதன்படி, திருப்பூர் வடக்கு தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் எம்.பி. சத்யபாமா, குமாரபாளையம் தொகுதியில் வெற்றி பெற்ற கட்சியின் துணைப் பொதுச் செயலர் விஜயலட்சுமி உள்ளிட்டோருக்கு இடம்பெற வாய்ப்புள்ளது.
முதல்கட்டமாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு இடமளிக்கவில்லை என்று விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை தோற்கடித்த வி.எம்.எஸ். மதார் பத்ருதீன் முஸ்தஃபா, அமைச்சர் காந்தியை தோற்கடித்த தாஹிரா உள்ளிட்டோருக்கும் வாய்ப்பளிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை தோற்கடித்த வி.எஸ். பாபு, தாம்பரம் எம்.எல்.ஏ. சரத் குமார், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. ரமேஷ் உள்ளிட்டோருக்கும் அமைச்சரவையில் இடம்பெற வய்ப்புள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், அக்கட்சி சார்பிலும் ஒரு பெண்ணுக்கு வாய்ப்பளிக்கப்படும் எனத் தெரிகிறது. அதன்படி, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற ஒரே பெண் எம்.எல்.ஏ.வான தாரகை கத்பர்ட் தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தெரிகிறது.