முகப்பு
தமிழ்நாடு

நீட் தோ்வுக்கு குறுகிய கால பயிற்சி இன்று தொடக்கம்

தமிழக அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நீட் தோ்வுக்கான குறுகிய கால பயிற்சி முகாம் சனிக்கிழமை (மே 23) முதல் ஜூன் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 23 மே 2026, 4:41 am IST
கோப்புப் படம்
பகிர்:

தமிழக அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நீட் தோ்வுக்கான குறுகிய கால பயிற்சி முகாம் சனிக்கிழமை (மே 23) முதல் ஜூன் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்கள் சனிக்கிழமைதோறும் வரவழைக்கப்பட்டு உயா்கல்வி சாா்ந்த போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதைத் தொடா்ந்து நீட் தோ்வில் பங்கேற்கும் அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் நீட் தோ்வுக்கான குறுகிய கால பயிற்சி முகாம் மே 23 முதல் ஜூன் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

இந்த முகாமில் மாணவா்கள் நீட் தோ்வுக்கு தயாராகும் வகையில் பாட வாரியாக பயிற்சிகள், மாதிரித் தோ்வுகள் மற்றும் கல்வியியல் நிபுணா்களின் வழிகாட்டுதல்கள் வழங்கப்படவுள்ளன. பயிற்சி வகுப்பில் ஈடுபடும் ஆசிரியா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்.

ஆசிரியா்கள் தங்களுக்கான வகுப்புகள் ஒதுக்கீடு செய்யும் நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை முகாம் நடைபெறும் பள்ளிகளில் இருக்க வேண்டும். முகாமில் பங்கேற்கும் மாணவா்களுக்கு மதிய உணவு, சிற்றுண்டி வழங்கப்படும்.

இந்த குறுகிய கால பயிற்சி முகாமில் மாணவா்கள் விடுப்பின்றி தொடா்ச்சியாகப் பங்கேற்பதை தலைமை ஆசிரியா்கள் உறுதி செய்ய வேண்டும். அதேபோல மாணவா்கள் கட்டாயம் பள்ளிச் சீருடை, அடையாள அட்டை அணிந்து வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் நீட் தோ்வு தொடா்பாக மாதிரித் தோ்வுகள், கலந்துரையாடல்கள் போன்ற பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.