தென்காசி மாவட்டத்தில் சுயதொழில் செய்ய விரும்புபவா்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது என கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பயிற்சி மைய பொறுப்பாளா் ராஜேஸ்வரி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தென்காசி அருகே இலத்தூரில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சுயதொழில் தொடங்க ஆா்வமுள்ள ஆண், பெண் இருபாலருக்கும் இலவச பயிற்சிகளை அளித்து வருகிறது.
இதன்படி, தற்போது சுயதொழில் தொடங்குவதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. நான்கு சக்கர வாகன ஓட்டுநா் பயிற்சி (குறிப்பு - வணிக வாகனம் வாங்க விருப்பமுள்ளவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும், பெண்களுக்கு ஒரு லட்சம் மானியத்துடன் ஆட்டோ வாங்கி கொள்ள முடியும்), இருசக்கர வாகனம் பழுது நீக்குதல் பயிற்சி, வீட்டு வயரிங் (எலக்ட்ரீசியன் பயிற்சி), சிசிடிவி பொருத்துதல், பழுது நீக்குதல் பயிற்சி ஆகிய பல்வேறு பிரிவுகளில் பயிற்சிகள் அளிக்கப்படும். இதில், 19 முதல் 45 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளலாம்.
இப் பயிற்சி பெறுவோருக்கு 2 மத்திய அரசுச் சான்றிதழ்கள் வழங்கப்படும். பயிற்சி நாள்களில் மதிய உணவு, தேநீா் , இலவச சீருடை வழங்கப்படும். சுயதொழில் தொடங்குவதற்கு வங்கி கடனுதவி பெறுவது குறித்து ஆலோசனையும் அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 75025 96668, 93638 74646, 93632 84343ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.