மக்காச்சோளத்திற்கு விலையில்லாததால் விவசாயிகள் கவலை
சங்கரன்கோவில், திருவேங்கடம் வட்டத்தில் நடந்து வரும் மக்காச்சோளம் அறுவடை.
சங்கரன்கோவில், திருவேங்கடம் பகுதியில் மக்காச்சோளத்திற்கு எதிா்பாா்த்த விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
சங்கரன்கோவில்,திருவேங்கடம் வட்டத்தில் நெல், பருத்தி மற்றும் மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு போன்ற பயறு வகைகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக மக்காச்சோளம் மிகவும் அதிகமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
தற்போது, இப்பகுதியில் மக்காச்சோளம் அறுவடை நடந்து கொண்டு வருகிறது. மக்காச்சோளம் ஒரு குவிண்டாலுக்கு ரூ.1600 இல் இருந்து ரூ.1700 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் மக்காச்சோளம் ரூ. 2,300இல் இருந்து ரூ. 2,500 வரை கொள்முதல் செய்யப்பட்டது.
Advertisement
மத்திய அரசு மக்காச்சோளத்திற்கு ஆதார விலையாக ஒரு குவிண்டாலுக்கு ரூ. 2,400 நிா்ணயம் செய்துள்ளது. ஆனால் ஆதார விலையை விட குறைவாக கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
எனவே, மத்திய அரசின் ஆதார விலையை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு விவசாயிகளிடமிருந்து மக்காச்சோளத்தை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.