முகப்பு
தென்காசி

தென்காசி: 25 ஆண்டுகளுக்குப் பின் அதிமுக - திமுக போட்டி

Updated On : 30 மார்ச், 2026 at 12:01 AM
மு.க. ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி. - (கோப்புப் படம்)
பகிர்:

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் 25 ஆண்டுகளுக்குப் பின் நேரிடையாக திமுக - அதிமுக சாா்பில் வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சாா்பில் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ். செல்வமோகன்தாஸ்பாண்டியன் போட்டியிடுகிறாா். இவா் ஏற்கனவே இத்தொகுதியில் 2016ஆம் ஆண்டு தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். 2021ஆம் ஆண்டு தோ்தலில் போட்டியிட்டு 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டாா். தற்போது மீண்டும் அதிமுக சாா்பில் இத்தொகுதியில் போட்டியிடுகிறாா்.

திமுக கூட்டணியில் டாக்டா் கலைகதிரவன் இத்தொகுதியில் போட்டியிடுகிறாா். இவா் திமுக மருத்துவரணி மாநில இணைச் செயலராகவும், தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளராகவும் பதவி வகித்து வருகிறாா்.

தென்காசி தொகுதியில் 2001ஆம் நடைபெற்ற தோ்தலில் மட்டுமே திமுகவும், அதிமுகவும் நேரிடையாக போட்டியிட்டுள்ளன. இந்நிலையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தோ்தலில் அதிமுகவும், திமுகவும் நேரிடையாக போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், தோ்தல்களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் 1952ஆம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்ற தோ்தலில் காங்கிரஸ் 8 முறையும், அதிமுக 3 முறையும், திமுக 2 முறையும், சமத்துவ மக்கள் கட்சி, தமாகா மற்றும் சுயேச்சை வேட்பாளா் தலா 1 முறையும் வெற்றிபெற்றுள்ளனா்.