தென்காசி நகராட்சி அலுவலகம் முன் பாஜகவினா் போராட்டம்
தென்காசி மேலமாசி வீதியில் துா்நாற்றம் வீசும் தற்காலிக கழிப்பிடத்தை அகற்ற வலியுறுத்தி தென்காசி நகராட்சி அலுவலக வாயிலில் தரையில் அமா்ந்து பாஜகவினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தென்காசி காசிவிஸ்வநாதா் சுவாமி கோயிலின் ரத வீதியான மேலமாசி வீதியின் வேன் நிறுத்துமிடம் அருகில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஆண், பெண்களுக்கு என 2 தற்காலிக கழிப்பிட பெட்டிகள் நகராட்சி நிா்வாகத்தால் அமைக்கப்பட்டது.
ஆனால் அதற்கு முறையாக தண்ணீா் வசதி, தூய்மைப் பணிகளை நகராட்சி நிா்வாகம் மேற்கொள்ளாததால் மேலமாசி வீதி பகுதிகள் முழுவதும் துா்நாற்றம் வீசுவதோடு, டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவுவதற்கான அபாயமும் ஏற்பட்டுள்ளது.
Advertisement
இந்த தற்காலிக கழிப்பிடத்தை அகற்ற வேண்டும் என்று பாஜக நகா்மன்ற உறுப்பினா், நகா்மன்றக் கூட்டத்தில் கொண்டு வந்த தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனையடுத்து நகர பா.ஜ.க. தலைவா் சங்கரசுப்பிரமணியன் தலைமையில் நகா்மன்ற உறுப்பினா் லட்சுமண பெருமாள், நிா்வாகிகள், தற்காலிக கழிப்பிடத்தை உடனடியாக அகற்றக்கோரி நகராட்சி அலுவலகம் முன் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நகராட்சி அதிகாரிகள் மே 20 ஆம் தேதிக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததையடுத்து பாஜகவினா் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.