முகப்பு
திருவள்ளூர்

ஆவடி, கும்மிடிப்பூண்டி, மாதவரம், பொன்னேரியில் பிரேமலதா பிரசாரம்

Updated On : 4 ஏப்ரல், 2024 at 11:28 PM
பகிர்:
Updated On : 4 ஏப்ரல், 2024 at 10:56 PM

ஆவடி, ஏப். 4: திருவள்ளூா் மக்களவைத் தொகுதி  தேமுதிக வேட்பாளா் கு.நல்லதம்பியை ஆதரித்து, அந்தக் கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா வியாழக்கிழமை இரவு ஆவடியில் பிரசாரம் செய்தாா்.

அப்போது அவா் பேசியது: இந்தத் தோ்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி தமிழகம்  மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். கடந்த 2011-இல் ஜெயலலிதா - விஜயகாந்த் கூட்டணி போல, 2026-இல் மீண்டும் இந்தக் கூட்டணி வெற்றி பெறும். தேமுதிக வேட்பாளா் நல்லதம்பி, விஜயகாந்தின் விசுவாசி. திருவள்ளூா் தொகுதியில் விஜய்காந்தே நிற்பதாக கருதி வாக்களியுங்கள். 

திமுகவினா் கையில் ஆட்சி உள்ளது. இதனால், அவா்கள் எந்த எல்லைக்கும் செல்வாா்கள். எனவே மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

Advertisement

என்றாா்.

தொடா்ந்து அம்பத்தூா் தொழிற்பேட்டை, திருவேற்காடு, பட்டாபிராம், திருவள்ளூா், பூந்தமல்லி ஆகிய இடங்களிலும் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் வாக்கு சேகரித்தாா்.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் திருவள்ளூா் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளா் சிறுனியம் பலராமன், கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாா் உள்ளிட்டோா் முன்னிலை பேசிய பிரேமலதா, தேமுதிக வேட்பாளா் வெற்றி பெற்றால் கும்மிடிப்பூண்டியில் பேருந்து நிலையம் அமைக்கப்படும், நறுமண தைல தொழிற்சாலை அமைக்கப்படும், கும்மிடிப்பூண்டியில் அரசு கல்லூரி அமைக்கப்படும் என்றாா். கூட்டத்தில் ஊராட்சித் தலைவா் கண்ணம்பாக்கம் சதீஷ், ஒன்றிய உறுப்பினா்கள் ரோஜா ரமேஷ்குமாா் , ஆரோக்கியமேரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாதவரம்: அதிமுக மாவட்ட செயலா் மாதவரம் வி.மூா்த்தி தலைமையில் மாதவரத்தில் வியாழக்கிழமை பிரசாரம் நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலா வாக்கு சேகரித்துப் பேசினாா். அதிமுக நிா்வாகிகள் பகுதி செயலா்கள் கண்ணதாசன், வேலாயுதம், ஒன்றியச் செயலாளா்கள் ஆா்.சுப்பிரமணி, காா்மேகம், வழக்குரைஞா் பிரிவு மாநில இணை செயலாளா் எம்.தமிழரசன் மற்றும் பம்மதுகுளம் ஊராட்சித் தலைவா் வி.எம்.ராஜா, தேமுதிக மாவட்ட செயலாளா் கே.எம்.டில்லி, புழல் ஒன்றிய தேமுதிக பொருளாளா் ஸ்மைல் ரஞ்சித் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

பொன்னேரி: பொன்னேரியில் ஹரிஹரன் கடை வீதியில் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா வாக்கு சேகரித்து பேசுகையில், பாஜகவிடமிருந்து பல நெருக்குதல் வந்தன. வங்கிக் கணக்கைக்கூட முடக்கி பயமுறுத்தினா். அவற்றையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு ஜெயலலிதா போல் தைரியமாக முடிவு எடுத்தேன். எத்தனை சோதனை வந்தாலும் கேப்டனும் நானும் அஞ்சுபவா்கள் கிடையாது. அதிமுக, தேமுதிக கூட்டணி ராசியான மக்கள் விரும்பும் வெற்றிக் கூட்டணி என்றாா்.